பதிவு செய்த நாள்
10 நவ2010
02:03
தீபாவளி பண்டிகையை தொடர்ந்து வந்த விடுமுறையில், குடிமகன்கள் உற்சாகத்தில் மிதந்ததால், 'டாஸ்மாக்' கடைகளில் பீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. குறைவான அளவே பீர் சப்ளை செய்யப்படுவதால், குடிமகன்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். தமிழகம் முழுவதும் செயல்படும் 7,434, 'டாஸ்மாக்' கடைகள் மூலம், ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை, அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 'டாஸ்மாக்' கடைகளில் விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், தட்டுப்பாடின்றி சரக்கு வினியோகிக்க 10 நாள் சரக்கு இருப்பு வைக்கப்பட்டது. இதில், அதிகளவில் பிராந்தி, ரம், ஜின், விஸ்கி உள்ளிட்ட ஐ.எம்.எப்.எஸ்., மதுபானங்களும், பீரும் சப்ளை செய்யப்பட்டது. பீரை விட ஐ.எம்.எப்.எஸ்., மதுபானங்கள் 50 சதவீதம் கூடுதலாக, 'ஸ்டாக்' வைக்கப்பட்டன. அதிகாரிகள் எதிர்பார்த்தது போல், தமிழகத்தில் உள்ள, 'டாஸ்மாக்' கடைகளில் தீபாவளி தினத்தில் மட்டும், 95 கோடி ரூபாய்க்கும், அதற்கு முதல் நாளில் 88 கோடி ரூபாய்க்கும் சரக்குகள் விற்பனையாகின. தீபாவளி பண்டிகையில், 'டாஸ்மாக்' நிர்ணயித்த இலக்கான 300 கோடி ரூபாயை தாண்டி, நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நாட்களில் மட்டும், 345 கோடி ரூபாய்க்கு சரக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், நவ., 4 முதல் 7ம் தேதி வரை, 'டாஸ்மாக்' கடைகளில் மது வகை சரக்குகளை விட, பீர்களின் விற்பனை அதிகரித்தது. இதன் காரணமாக, 'டாஸ்மாக்' கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த பீர்கள் அனைத்தும் முற்றிலும் விற்று தீர்ந்தன. சில கடைகளில், தீபாவளி பண்டிகை நாளின் மதியமே, பீர் அனைத்தும் தீர்ந்தது. அதே நேரத்தில், குடோன்களிலும் பீர் ஸ்டாக் இல்லை. 'டாஸ்மாக்' கடைகளில் சராசரியாக, ஒரு லட்சத்து 20 ஆயிரம் கேஸ் (ஒரு கேசில் 12 பாட்டில்) பீர்கள் விற்பனை நடக்கிறது. கோடை காலத்தில் 1.75 லட்சம் முதல் 2.25 லட்சம் கேஸ் வரை உயர்வு ஏற்படுவது வழக்கம். குளிர் மாதங்களான அக்டோபர் துவங்கி, ஜனவரி வரையிலான கால கட்டத்தில், தினசரி பீர் விற்பனை 70 ஆயிரம் முதல் 85 ஆயிரம் கேஸ்கள் தான் விற்பனையாகும். ஆனால், தீபாவளி பண்டிகை நாளில் மட்டும், தமிழகம் முழுவதும் உள்ள, 'டாஸ்மாக்' கடைகளில் 2.50 லட்சம் பீர் கேஸ்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 'டாஸ்மாக்' கடைகளில் பீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, தேவை அதிகரித்துள்ள நிலையில், சப்ளை குறிப்பிட்டு சொல்லும் படி செய்யப்பட வில்லை. நேற்று முன்தினம், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட, 'டாஸ்மாக்' கடைகளுக்கும் குறைந்த அளவிலான பீர் சப்ளை செய்யப்பட்டுள்ளது. அதாவது மாவட்டத்துக்கு 2,000 கேஸ்கள் மட்டுமே சப்ளை செய்யப்பட்டது. தேவை 3,000 கேஸ் என்ற அளவில் உள்ள போது, 2,000 கேஸ்கள் மட்டுமே சப்ளை செய்யப்பட்டதால், தட்டுப்பாடு தொடர்கிறது. பீருக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக, 70 ரூபாய்க்கு விற்பனை செய்யக் கூடிய புல் பீர், நேற்று முன்தினம் 100 ரூபாய்க்கும், 35 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் ஆப் பீர், 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. - நமது சிறப்பு நிருபர் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|