பதிவு செய்த நாள்
10 நவ2010
02:03
மும்பை: ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உஷா தோரட், பதவியிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார். மத்திய ரிசர்வ் வங்கியில் கடந்த 38 ஆண்டுகளாக பணியாற்றி, பல்வேறு பொறுப்புகளை வகித்து, துணை கவர்னர் பதவிக்கு வந்தவர் உஷா தோரட். சென்னையில் பிறந்த இவர், டில்லியில் கல்லூரி படிப்பை முடித்தார். மத்திய ரிசர்வ் வங்கியில், 1972ல் பணிக்கு சேர்ந்த உஷா, 2005 நவம்பர் 10ம் தேதி துணை கவர்னராக பதவியேற்றார். ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குனர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார். பாங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் பாங்க், நபார்டு வங்கிகளின் நிர்வாக குழுவிலும் இருந்துள்ளார். ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைகளை உருவாக்குவது உட்பட, வங்கியின் பல்வேறு நடவடிக்கைகளில் முக்கிய இடம் பிடித்துள்ளார். இவருக்கு இரண்டாண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிதியமைச்சகம் மறுத்துவிட்டதை தொடர்ந்து, உஷா தோரட், பதவியிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார். இவருடன் துணை கவர்னராக உள்ள சியாமளா கோபிநாத், கடந்த 10 மாதத்திற்கு முன்பு தான், இரண்டாண்டுக்கு பதவி நீட்டிப்பு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. துணை கவர்னர்களாக உள்ளவர்கள் 62 வயது வரை பதவியில் நீடிக்கலாம் என்ற நடைமுறை இருந்துவந்தது. ஆனால், உஷா விஷயத்தில் இந்த நடைமுறையை முடிவுக்கு கொண்டு வந்து, நிதியமைச்சகம் அதிரடி முடிவை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கியில் துணை கவர்னர் நிலையில் அதிகம் பேர் உள்ளதால், இந்த நடைமுறை தொடர்ந்தால், பிரச்னை வரும் என்ற எண்ணத்தில் நிதியமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|