பதிவு செய்த நாள்
19 ஜூன்2012
00:57
திருப்பூர்:விசைத்தறி ஜவுளி ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் சுணக்கத்தால், உற்பத்தியான ஜவுளி ரகங்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.காடா துணி:திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களின் புறநகர் பகுதிகளில், விசைத்தறிகள் அதிகளவில் உள்ளன. ஏறத்தாழ 2 லட்சம் விசைத்தறிகள், காடா துணி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.
இதில் 10 முதல் 15 சதவீத விசைத்தறிகளில், வேட்டி சேலை ரகங்களும், 25 சதவீத விசைத்தறிகளில் சர்ட்டிங் மற்றும் சூட்டிங் ரகங்களும், 60 சதவீத தறிகளில் பிற ரக காடா துணிகளும் உற்பத்தியாகிறது.இவை,பெருமளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. வட மாநில வியாபாரிகள் இவற்றை வாங்கிச் சென்று, "பிராசசிங்' செய்து ஏற்றுமதி செய்கின்றனர்.
இப்பகுதியில், 30க்கு 30 ரகம், 50 அங்குல அகலம் கொண்ட 135 கிராம் எடையுள்ள துணிகள், நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. சில மாதங்களாக, ஏற்றுமதியில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.
ஜவுளி உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:கடந்த சில மாதங்கள் வரை, மீட்டர் 27.50 ரூபாய்க்கு விற்பனையானது. நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் தற்போது வர்த்தக சூழ்நிலை சீராக இல்லை. இதனால், இதன் விலை மீட்டருக்கு 3 ரூபாய் குறைந்து 24.50 ரூபாய்க்கு கேட்கப்படுகிறது.இந்த துணி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் 30 ரகம் வார்ப் நூல்,
50 கிலோ எடையுள்ள மூட்டை 7,500 ரூபாயில் இருந்து 7,900 ஆகவும், வெப்ட் நூல் 8,500 ரூபாயில் இருந்து 8,900 ஆகவும், மூட்டைக்கு 400 ரூபாய் அதிகரித்துள்ளது.
உற்பத்தி செலவு:துணியின் விற்பனை விலை குறைந்துள்ள அதே நேரத்தில், நூலிழை விலை உயர்வால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் இரண்டு நிலையிலும் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.சுற்றுச் சூழல் மாசு பிரச்னையால், "பிராசசிங்' பணிகளும் தொய்வடைந்துள்ளன. இதனால், வடமாநில வியாபாரிகள் துணி வாங்குவதை குறைத்துக் கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|