பதிவு செய்த நாள்
29 ஜூன்2013
00:07
தமிழக மாம்பழக் கூழுக்கு, கூடுதலாக, 100 சதவீதம், ஏற்றுமதி ஆர்டர் குவிந்துள்ளது. ஆனால், "பேக்கிங்' செய்ய அரபு நாடுகளில், புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதால், ஏற்றுமதியில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.உலக அளவில், 63 நாடுகளில், மா மரங்கள் உள்ளன.இந்தியாவில், 1.90 கோடி டன் மாம்பழம் உற்பத்தியாகிறது.தமிழகத்தில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 926 ஹெக்டேர் பரப்பில், மா சாகுபடி நடக்கிறது.
முதலிடம்:தமிழக அளவில்,மாம்பழ உற்பத்தியில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள், முதலிடம் வகிக்கின்றன. இங்கு சாகுபடியாகும், தோத்தாபுரி, அல்போன்சா மற்றும் ராஸ்புரி ரகங்கள், 40 சதவீதம் மாம்பழக்கூழ் தயாரிக்க பயன்படுகிறது. மாம்பழக்கூழ் உற்பத்திக்கு, இங்கு, 60 தொழிற்சாலைகள் உள்ளன.
சீசனில், 80 ஆயிரம் டன் மாம்பழங்களில் இருந்து, 40 ஆயிரம் டன், மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 90 சதவீதம், சவுதி அரேபியா, துபாய், ஏமன், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும், மாம்பழ பருவ காலத்தில், 75 நாட்கள் மட்டுமே, மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளில், உற்பத்தி நடக்கும்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட தொழிற்சாலைகளுக்கு, கடந்த ஆண்டு, 75 ஆயிரம் டன் மாம்பழக்கூழ் ஏற்றுமதி செய்ய "ஆர்டர்' கிடைத்தது. இது, இந்த ஆண்டு, ஒரு லட்சத்து 50 ஆயிரம் டன்னாக அதிகரித்துஇருந்தது.
பருவமழை தவறியதால், மாம்பழத்தின் தரம் குறைந்துள்ளது. இதனால், கர்நாடக மாநிலம், கோலார், ஆந்திர மாநிலம், பாங்காரு பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து, மாம்பழங்களை, கொள்முதல் செய்து, தொழிற்சாலைகளுக்கு கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தினமும், 3,000 டன் வரை, இப்படி கொள்முதல் செய்யப்படுகிறது.
கட்டுப்பாடு:இப்படி, மாம்பழக்கூழ் தயாரித்த போதிலும், அரபு நாடுகளில், "பேக்கேஜ்' விதிகளில், தகர டப்பாவை பயன் படுத்துவதில், புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், போதுமான, "ஆர்டர்' இருந்தும், ஏற்றுமதியில், பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சில நிறுவனங்கள், 220 முதல் 250 லிட்டர் கொள்ளளவுள்ள, பிளாஸ்டிக் பேரல்களில், மாம்பழக்கூழை நிரப்பி விற்பனைக்கு அனுப்புகின்றன.
சீனாவில் கிராக்கி: சீன இறக்குமதியாளர்கள், தமிழகத்தில் இருந்து, அதிக அளவில், மாம்பழக்கூழ் கொள்முதல் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். அரபு நாடுகளிலும், தமிழக மாம்பழக்கூழுக்கு, அதிக வரவேற்பு கிடைத்து உள்ளது. புதிய கட்டுப்பாடு காரணமாக, அடுத்த ஆண்டு முதல், பிளாஸ்டிக் பேரல்களில், மாம்பழக்கூழ் அடைத்து, விற்க, உற்பத்தி யாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
- நமது நிருபர்-
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|