பதிவு செய்த நாள்
01 ஜூலை2013
00:38
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த அரிசி ஏற்றுமதி, 6 சதவீதம் குறைந்து, 95 லட்சம் டன்னாக சரிவடையும் என்று, மதிப்பிடப்பட்டு உள்ளது. வியட்னாம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின், மலிவு விலை அரிசியை வாங்க, சர்வதேச வர்த்தகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவது தான், இதற்கு காரணம்.பாசுமதி அரிசி:சென்ற, 2012ம் ஆண்டு, இந்தியா, ஒரு கோடி டன் அரிசியை ஏற்றுமதி செய்தது.
நடப்பு நிதியாண்டில், பாசுமதி அல்லாத சாதாரண அரிசி ஏற்றுமதி, 15 சதவீதம் சரிவடைந்து, 55 லட்சம் டன்னாக குறையும் என, தெரிகிறது. அதே சமயம், பாசுமதி அரிசி ஏற்றுமதி, 14 சதவீதம் உயர்ந்து, 40 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச போட்டியை சமாளிக்கும் வகையில், மத்திய அரசு, நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை, அண்மையில் உயர்த்தியது.சாதாரண அரிசி ஏற்றுமதியில், அரைவேக்காட்டு அரிசியின் பங்களிப்பு, 50 சதவீதமாக உள்ளது.
சர்வதேச போட்டியை சமாளிக்கும் வகையில், இதன் ஏற்றுமதிக்கான ஒரு டன் அரிசியின் விலை, 435 டாலரில் இருந்து, 415 டாலராக குறைக்கப்பட்டுள்ளது.வியட்னாம், சர்வதேச சந்தையில், ஒரு டன் அரிசியை, 370 டாலருக்கு விற்பனை செய்கிறது. இதே வகையான அரிசியை, இந்தியா, 440 டாலருக்கு ஏற்றுமதி செய்கிறது. மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு, இந்தியா அதிக அளவில் அரிசியை ஏற்றுமதி செய்கிறது.இந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு வீழ்ச்சி காரணமாக, ஏற்றுமதியாளர்கள், அரிசி விலையை குறைக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
உற்பத்தி:இதனால், இந்தியாவின் சாதாரண அரிசி ஏற்றுமதி, 40 லட்சம் டன்னாக குறையவும் வாய்ப்புள்ளது என, ஏற்றுமதியாளர் ஒருவர் தெரிவித்தார். அதே சமயம், இந்தியாவின் பாசுமதி அரிசி உற்பத்தி, 60 லட்சம் டன்னில் இருந்து, 80 லட்சம் டன்னாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.இதனால் பாசுமதி அரிசி ஏற்றுமதி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உலக பாசுமதி சந்தையில், இந்தியா, 65 சதவீத பங்களிப்புடன் முன்னணியில் உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான், எஞ்சிய பங்களிப்பை கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|