பதிவு செய்த நாள்
12 ஜூலை2013
00:43
மும்பை:நடப்பு 2013-14ம் நிதியாண்டின், முதல் மூன்று மாத காலத்தில், வங்கிகள் வழங்கிய கடன் மற்றும் திரட்டிய டெபாசிட் வளர்ச்சி குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.இது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
சில்லரை வர்த்தகம்:ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், இந்திய வங்கிகள் வழங்கிய கடன், 1,55,668 கோடி ரூபாய்என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 1,54,525 கோடி ரூபாய்என்ற அளவில் இருந்தது என, ரிசர்வ் வங்கியின், புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உள்நாட்டில், சில்லரை வர்த்தகம், விவசாயம், குறு, சிறு மற்றும் நடுத்தர துறை நிறுவனங்கள் அதிகளவில் கடன் பெற்றுள்ளன. அதேசமயம், பெரிய நிறுவனங்கள் புதிய திட்டங்கள் எதுவும் துவங்காததால், இப்பிரிவில் வழங்கப் பட்ட வங்கி கடன் மிகவும் குறைந்து போயுள்ளது.கணக்கீட்டு காலாண்டில், வங்கிகள் திரட்டிய டெபாசிட், 4 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், வங்கிகள் திரட்டிய டெபாசிட், 3,30, 849 கோடி ரூபாய்என்ற அளவில் இருந்தது. இது, நடப்பு நிதியாண்டின், முதல் மூன்று மாத காலத்தில், 3,44,206 கோடி ரூபாய்என்ற அளவில் உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாத காலத்தில், வங்கிகளின் ஒட்டு மொத்த கடன் - டெபாசிட் வளர்ச்சி விகிதம், 45.22 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 46.70 சதவீதமாக இருந்தது. அதா வது, வங்கிகள் திரட்டும், 100 ரூபாய்டெபாசிட்டில், வழங்கிய கடன், 45.22 ரூபாய்என்ற அளவில் குறைந்துள்ளது. மீதமுள்ள தொகை, அர” கடன் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.நடப்பு நிதியாண்டில், ரிசர்வ் வங்கி, வங்கிகளின் கடன் வளர்ச்சி, 15 சதவீத அளவிற்கும், டெபாசிட், 14 சதவீத அளவிற்கும் இருக்கும் என, மதிப்பீடு செய்துள்ளது.
உணவு சாரா கடன்:இதற்கிடையே, வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன், ஜூன் 28ம் தேதி வரையிலான, 15 தினங்களில், 13.5 சதவீதம் என்ற குறைந்த அளவில் வளர்ச்சி கண்டு, 53,02,650 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த மார்ச் 22ம் தேதி முதல் இது வரையிலுமான காலத்தில், வங்கிகள் வழங்கிய கடன், 13.75 சதவீதம் மற்றும் 14.91 சதவீதத்திற்கும் இடையிலேயே இருந்தது.
ஜூன் 28ம் தேதி வரையிலான 15 தினங்களில், வங்கிகள் திரட்டிய டெபாசிட், 13.75 சதவீதம் உயர்ந்து, 70,90,153 கோடி ரூபாயாக இருந்தது. வங்கிகளின் டெபாசிட் வளர்ச்சியும், கடந்த இரண்டரை மாதங்களாக, 14 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.வங்கி கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால், பெரிய நிறுவனங்கள் கடன் வாங்குவது மிகவும் சரிவடைந்து உள்ளது. இது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தேக்கத்தை ஏற்படுத்தியுள் ளது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான, "ரெப்போ' விகிதங்களை பல முறை குறைத்து உள்ள நிலையிலும், அதன் பலன் வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு சென்றடையவில்லை. எனவே, வங்கிகள் அடிப்படை வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்.
அடிப்படை வட்டி விகிதம்:இதையடுத்து, நடப்பு ஜூலை மாதத்தில், இதுவரையிலுமாக, பேங்க் ஆப் இந்தியா, கனரா பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய ஐந்து வங்கிகள் அடிப்படை வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் முதல் 0.30 சதவீதம் வரை குறைத்துள் ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|