பதிவு செய்த நாள்
11 செப்2013
01:35
புதுடில்லி:கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 1,091 கோடி டாலராக (65,460 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.நாட்டின் ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்ததால், நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பும், கடந்த, சில மாதங்களாக கடும் வீழ்ச்சி கண்டது. குறிப்பாக, நடப்பாண்டின் துவக்கத்தில் இருந்து, கடந்த வாரம் வரையிலுமாக, டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு, 20 சதவீதத்திற்கும் மேல் சரிவடைந்தது.
சுங்கவரி:இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்றவற்றின் மீதான, சுங்க வரியை, 10 சதவீதமாக உயர்த்தியது. இது தவிர, அத்தியாவசியம் இல்லாத பொருட்கள் இறக்குமதியை குறைக்கும் வகையிலும், பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது.மேலும், மத்திய அரசு, நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையிலும், பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்தது. பாரம்பரிய சந்தைகள் தவிர, புதிய நாடுகளுக்கும், ஏற்றுமதி மேற்கொள்ளும் வகையில் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.
இது போன்ற நடவடிக்கைகளுக்கு, தற்போது, பலன் கிடைத்து உள்ளது.இது நாள் வரை, இந்தியாவின், சாதாரண வகை அரிசி ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை விதித்திருந்தது. இத்தடையை, அந்நாடு தற்போது விலக்கி கொண்டுள்ளது. இதனால், அந்நாட்டிற்கான, அரிசி ஏற்றுமதியும் அதிகரிக்கும்.நடப்பாண்டு ஆகஸ்ட் :மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 2,614 கோடி டாலராக (1,56,840 கோடி ரூபாய்) வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த நிதிஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 12.97 சதவீதம் அதிகமாகும்.இறக்குமதி:கணக்கீட்டு மாதத்தில், நாட்டின் இறக்குமதி, 0.68 சதவீதம் சரிவடைந்து, 3,705 கோடி டாலராக (2,22,300 கோடி ரூபாய்) மிகவும் குறைந்து உள்ளது.
இதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 1,091 கோடி டாலராக குறைந்துள்ளது. அதேசமயம், கடந்தாண்டின் இதே மாதத்தில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 1,470 கோடி டாலராக (88,200 கோடி ரூபாய்) இருந்தது என, ஆனந்த் சர்மா குறிப்பிட்டார்.கடந்த ஆகஸ்ட் மாதத்தில், தங்கம் இறக்குமதி, டாலர் மதிப்பின் அடிப்படையில், 65 கோடி டாலராக (3,900 கோடி ரூபாய்) மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. இது, சென்ற ஜூலை மாதத்தில், 220 கோடி டாலர் (13,200 கோடி ரூபாய்) என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
கச்சா எண்ணெய்நடப்பாண்டு ஜூலை மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 11.64 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,583 கோடி டாலராக அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.கச்சா எண்ணெய்மற்றும் தங்கம் போன்றவற்றின் இறக்குமதியால், கடந்த 2012-13ம் நிதிஆண்டில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.8 சதவீதம் அல்லது, 8,820 கோடி டாலராக மிகவும் அதிகரித்திருந்தது.இந்நிலையில், நடப்பு நிதிஆண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.8 சதவீதம் அல்லது 7,000 கோடி டாலராக குறைக்க, மத்திய நிதி அமைச்சகம் இலக்கு நிர்ணயித்து உள்ளது.
தங்கம் இறக்குமதி 2.50 டன்னாக வீழ்ச்சிமத்திய அரசின் கடும் நடவடிக்கையால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 2.50 டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது, ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை (47.50 டன்) காட்டிலும், 95 சதவீதம் குறைவாகும்.நடப்பாண்டு ஜூன் மாதத்தில், தங்கம் இறக்குமதி, 31.50 டன்னாகவும், மே மாதத்தில், 162 டன்னாகவும், ஏப்ரல் மாதத்தில், 142.50 டன்னாகவும் இருந்தது.உலகளவில் தங்கம் பயன்பாட்டில், முன்னணியில் உள்ள இந்தியாவில், கடந்த இரண்டு மாதங்களாக, எவ்வித பண்டிகை காலமும் இல்லாததால், தங்கத்திற்கான தேவை குறைந்து உள்ளது. இதுவும், இதன் இறக்குமதி குறைவிற்கு காரணம்.அதேசமயம், அக்டோபர் மாதம் முதல் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் மற்றும் திருமண சீசன் வரவுள்ளதால், தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் என, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|