பதிவு செய்த நாள்
12 ஏப்2014
13:57
சென்னை: மத்திய, மாநில அரசுகளின் வரி நிலுவை வழக்குகளால் சிக்கித் தவிக்கும், சென்னை நோக்கியா நிறுவனம், தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கு, தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையில், தமிழக அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என, தொழிலாளர் நல ஆணையத்தில், நோக்கியா தொழிலாளர்கள் சங்கம் முறையிட்டுள்ளது.
சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது, நோக்கியா நிறுவனம். இதில், 8,000 பேர் பணி புரிகின்றனர். இந்நிறுவனத்தை, மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு விற்க முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இம்மாத இறுதிக்குள், விற்பனை ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என, நோக்கியா அறிவித்துள்ளது. இதற்கிடையே, நோக்கியா நிறுவனம், 22,000 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரி நிலுவைக்காக, நோக்கியாவின் சொத்துக்களையும் முடக்கியுள்ளது. இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
தமிழக அரசுக்கும் விற்பனை வரியாக, 2,200 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதை எதிர்த்தும், நோக்கியா நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நெருக்கடியான நிலையில், நோக்கியா நிறுவனத்தின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் புதிய மாடல் மொபைல்போன் கள் உற்பத்தி,சென்னை ஆலையில் நடக்காது எனவும், அறிவித்துள்ளனர். உற்பத்தி குறைக்கப்பட்ட நிலையில், பழைய நிலைக்கு உற்பத்தியை விரைவில் துவங்குவது இப்போதைக்கு சாத்தியமில்லை. எனவே, ஊழியர்கள் விருப்ப ஓய்வில் செல்லலாம் என, நோக்கியா அறிவித்துள்ளது.
விருப்ப ஓய்வு திட்டத்துக்கு, நோக்கியா ஊழியர்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆலைக்கு நெருக்கடி நிலவுவதை காரணம் காட்டி, தொழிலாளர்களை படிப்படியாக குறைத்து விடலாம் என்ற எண்ணத்தில், விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளனர். இதன்மூலம், நிறுவனத்தை விற்பது எளிதாக இருக்கும் என, நோக்கியா நிறுவனம் கருதுவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|