பதிவு செய்த நாள்
10 ஜூலை2014
00:41
மூலப்பொருட்கள் செலவு அதிகரித்துள்ளதால் கோழி, முட்டை ஆகியவற்றின் விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.
நடப்பு ஜூலை 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை, மொத்த விற்பனையில் ஒரு கிலோ கறிக்கோழி விலை, 6 சதவீதம் உயர்ந்து, 70 ரூபாயாகவும், முட்டை விலை, 17 சதவீதம் அதிகரித்து, 3.50 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இவை, கடந்த ஜூன் இறுதியில், முறையே 66 ரூபாய் மற்றும் 3 ரூபாயாக இருந்தன.வழக்கமாக, கோடை உச்சத்திலும், குளிர் காலத்திலும், கோழி மற்றும் முட்டை விலை உயரும். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வுக்கு, கோழி தீவனம் உள்ளிட்ட மூலப் பொருட்கள் விலை உயர்வே காரணம் என்று கூறப்படுகிறது.
நெருக்கடி:இது குறித்து, வெங்கடேஸ்வரா ஹாட்சரீஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் கே.ஜே.ஆனந்த் கூறியதாவது:கடந்த சில மாதங்களில், ஒரு கிலோ சோயா விலை, 35 ரூபாயில் இருந்து, 50 ரூபாயாகவும், சோளம் விலை, 12 ரூபாயில் இருந்து, 15 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. அதனால், கோழிப் பண்ணை துறை, குளிர்காலம் வரை காத்திருக்காமல், மூலப் பொருட்கள் விலை உயர்வை, நுகர்வோர் மீது உடனடியாக சுமத்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
பண்ணையாளர்கள், ஒரு கிலோ கறிக்கோழியை 80 ரூபாய்க்கும், முட்டை 4 ரூபாய்க்கும் குறைவாக விற்க முடியாத நிலையில் உள்ளனர். விலை ஏற்ற,இறக்கத்தால், அமைப்பு சாராத பலர் இத்தொழிலை கைவிட்டுள்ளனர். விற்பனை விலை உயராத பட்சத்தில், மேலும் பலர் கடைகளை மூட நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.மூலப் பொருட்கள் விலை உயர்வு, கோழிப் பண்ணை துறைக்கு மிகுந்த சவாலாக உள்ளது என, ரபோ பேங்க் இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, இவ்வங்கியின் ஆய்வாளர் பவன் குமார் பேசியதாவது:கோழி தீவனம் தயாரிக்க பயன்படும் சோயா புண்ணாக்கு விலை, சென்ற ஜனவரியில் டன்னுக்கு, 548 டாலராக (32,880 ரூபாய்) இருந்தது.இது, மே மாதம், 40 சதவீதம் உயர்ந்து, 780 டாலராக (46,800 ரூபாய்) அதிகரித்துள்ளது. ஆனால், இந்த விலையேற்றத்தை அப்படியே நுகர்வோர் மீது சுமத்த முடியாததால், இத்துறை சார்ந்த நிறுவனங்களின் லாப வரம்பு குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சந்தை மதிப்பு: கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவில், ஜன.,–மார்ச் வரையிலான காலாண்டில், இந்திய கோழிப் பண்ணை துறையின் சராசரி லாப வரம்பு, கடந்த ஆண்டு, இதே காலத்தை விட, 70 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு கிலோ கறிக்கோழியின் விலை, 80 ரூபாயில் இருந்து, ஜூன் மாதம், 66 ரூபாயாக குறைந்து, தற்போது உயர்ந்துஉள்ளது. அது போன்று, இதே காலத்தில், முட்டை விலை, 4 ரூபாய் வரை உயர்ந்து, தற்போது, 3 ரூபாயாக குறைந்து உள்ளது.
இந்திய கோழிப் பண்ணையின் சந்தை மதிப்பு, 49 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இது, ஆண்டுக்கு, 10 – 12 சதவீதம் வளர்ச்சி காணும் என, அசோசெம் மதிப்பிட்டுள்ளது.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|