பதிவு செய்த நாள்
12 ஜூலை2014
00:43
புதுடில்லி:நடப்பு 2014–15ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, 4.29 சதவீதம் வளர்ச்சி கண்டு, 14.30 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 13.71 கோடி டன்னாக இருந்தது என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தற்காலிகபுள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகம்:உள்நாட்டில், 13 முக்கிய துறைமுகங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில், கோல்கட்டாவில் அமைந்துள்ள ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ் தவிர்த்து, ஏனைய 12 துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 3 முக்கிய பெரிய துறைமுகங்கள் உள்ளன. அவற்றில், காமராஜர் துறைமுகம் (முன்பு எண்ணுார்) கையாண்ட சரக்கின் அளவு,15.74 சதவீதம் வளர்ச்சி கண்டு, 61.99 லட்சம் டன்னிலிருந்து, 71.75 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
இதே போன்று, வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கையாண்ட சரக்கு, 9.38 சதவீதம் வளர்ச்சி கண்டு, 74.15 லட்சம் டன்னாகவும், சென்னை துறைமுகம் கையாண்ட சரக்கு, 0.03 சதவீதம் மட்டுமே உயர்ந்து, 1.28 கோடி டன்னாகவும் உள்ளன.
பாரதீப்:மதிப்பீட்டு காலாண்டில், பரதீப் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 1.86 சதவீதம் அதிகரித்து, 1.70 கோடி டன்னிலிருந்தது, 1.73 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.இதே போன்று, விசாகப்பட்டினம் துறைமுகம் கையாண்ட சரக்கு, 5.29 சதவீதம் அதிகரித்து, 1.45 கோடி டன்னிலிருந்து, 1.53 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
கணக்கீட்டு காலாண்டில், மர்மகோவா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, அதிகபட்சமாக, 31.10 சதவீதம் வளர்ச்சி கண்டு, 26.72 லட்சம் டன்னிலிருந்து, 35.03 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.மேலும், கொச்சின் துறைமுகம் கையாண்ட சரக்கு, 4.44 சதவீதம் உயர்ந்து, 52.74 லட்சம்டன்னிலிருந்து, 55.08 லட்சம் டன்னாகவும், நியூ மங்களூர் துறைமுகம் கையாண்ட சரக்கு, 0.18 சதவீதம் அதிகரித்து, 96.68 லட்சம் டன்னிலிருந்து, 96.85 லட்சம் டன்னாகவும் வளர்ச்சி கண்டுள்ளன.
மும்பை:மதிப்பீட்டு காலாண்டில், மும்பை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 9.72 சதவீதம் அதிகரித்து, 1.32 கோடி டன்னிலிருந்து, 1.45 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.இதே போன்று, ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் துறைமுகம் கையாண்ட சரக்கு, 5.64 சதவீதம் உயர்ந்து, 1.55 கோடி டன்னிலிருந்து, 1.64 கோடி டன்னாகவும், கண்ட்லா துறைமுகம் கையாண்ட சரக்கு, 0.31 சதவீதம் அதிகரித்து, 2.32 கோடி டன்னிலிருந்து, 2.33 கோடி டன்னாகவும் வளர்ச்சி கண்டுள்ளன.
கோல்கட்டா:கணக்கீட்டு காலாண்டில், கோல்கட்டா டாக் சிஸ்டம்ஸ் துறைமுகம் கையாண்ட சரக்கு, 3.05 சதவீதம் உயர்ந்து, 29.55 லட்சம் டன்னிலிருந்து, 30.45 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.அதேசமயம், ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ் கையாண்ட சரக்கு, 3.31 சதவீதம் சரிவடைந்து, 7.07 லட்சம் டன்னிலிருந்து, 6.83 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.இதையடுத்து, ஒட்டு மொத்த அளவில் இவ்விரு துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு, 1.44 சதவீதம் சரிவடைந்து, 1 கோடி டன்னிலிருந்து, 98.82 லட்சம் டன்னாக வீழ்ச்சி கண்டு உள்ளது.இவ்வாறு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|