பதிவு செய்த நாள்
18 ஜூலை2014
23:28
புதுடில்லி:‘‘நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, முந்தைய, 2013 – 14ம் நிதியாண்டின் அளவான, 4.7 சதவீதத்தை காட்டிலும் மேம்படும்,’’ என, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பார்லிமென்டில் தெரிவித்தார்.
முதலீட்டு விகிதம்:இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:கடந்த, 2011 – 12ம் நிதியாண்டில், 35.5 சதவீதமாக இருந்த முதலீட்டு விகிதம், 2012 – 13ல், 34.8 சதவீதமாக சரிவடைந்துள்ளது. முதலீட்டு நடவடிக்கைகள் சுணக்கம் கண்டதையடுத்து, கடந்த இரண்டு நிதியாண்டுகளாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதத்திற்கும் கீழாக சரிவடைந்தது.
ஆனால், தற்போது, நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் வந்துள்ளது. சர்வதேச நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பி வருகிறது.இவை தவிர, நிதிநிலை மேம்பாடு மற்றும் தொழில் துறை வளர்ச்சி சூடுபிடிப்பு போன்றவற்றால், நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
பட்ஜெட் விவாதத்தின் போது பேசிய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:தற்போதைய பொருளாதார சுணக்க நிலைக்கு, முந்தைய, ஐ.மு., கூட்டணி அரசின் தவறான கொள்கைகளே முக்கிய காரணம். நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், பொருளாதாரத்தில் நீடித்த வளர்ச்சியை உருவாக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
வேலைவாய்ப்பு:குறிப்பாக, இன்சூரன்ஸ், பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது உள்ளிட்ட, தனியார் முதலீடுகளை அதிகளவில் கவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.இது, உள்நாட்டில், தொழில் மற்றும் தயாரிப்பு துறைகளை ஊக்குவிப்பதோடு, வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்; இதன் காரணமாக, பொருளாதாரம் மீட்சி பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|