பதிவு செய்த நாள்
02 செப்2014
00:28
புதுடில்லி: இந்திய நிறுவனங்கள், தங்களின் மூலதனத்தை அதிகரித்து கொள்ளும் வகையில், நிறுவன முதலீட்டாளர்களுக்கு, தனிப்பட்ட கடன்பத்திரங்களை ஒதுக்கீடு செய்து திரட்டிய தொகை, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்., – ஜூன்), 55 சதவீதம் சரிவடைந்து, 43,147 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 96,186 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது என, பிரைம் டேட்டாபேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், தனியார் துறை நிறுவனங்கள், திரட்டிய தொகை, 38,161 கோடியிலிருந்து, 28,991 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதே போன்று, நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் இவ்வகை வெளியீட்டின் வாயிலாக திரட்டிய தொகை, 72 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 47,272 கோடியிலிருந்து, 13,058 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், பொதுத் துறை நிறுவனங்கள், தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீடு மூலம், 8,568 கோடி ரூபாய் திரட்டியிருந்தன. இது, கணக்கீட்டு காலாண்டில், முற்றிலும் நின்றுபோயுள்ளது.தனியார் நிறுவனங்களை பொறுத்த மட்டில், எச்.டி.எப்.சி., நிறுவனம், இவ்வகை வெளியீட்டின் மூலம் அதிகபட்சமாக, 4,450 கோடி ரூபாயை திரட்டியுள்ளது.
இதையடுத்து, எக்சிம் பேங்க் (3,018 கோடி ரூபாய்), ஐ.ஓ.டி. உட்கல் (3 ஆயிரம் கோடி), ஐ.டி.எப்.சி. (2,730 கோடி) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (2,500 கோடி) உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.நிறுவனங்கள், கடந்த 2013–14ம் நிதியாண்டில், தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீடு மூலம், 2.71 லட்சம் கோடி ரூபாயை திரட்டியிருந்தன. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 3.52 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|