பதிவு செய்த நாள்
03 செப்2014
00:18
திருப்பூர்:தமிழக நுாற்பாலைகள், நுாலிழை விலையை கிலோவுக்கு, 7 ரூபாய் குறைத்து உள்ளன.தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, ஈரோடு, திருப்பூர், கோவை பகுதிகளில் அதிகளவில் நுாற்பாலைகள் இயங்கி வருகின்றன.
வெளிமாநிலங்கள்:இந்நுாற்பாலைகள், வெளிமாநிலங்களிலிருந்து பருத்தியை கொள் முதல் செய்து, நுாலிழைகளை உற்பத்தி செய்கின்றன.நடப்பு பருத்தி பருவம் துவக்கம் முதற்கொண்டே, தமிழக நுாற்பாலைகளுக்கு, வெளிமாநிலங்களில் இருந்து தரமான பருத்தி கிடைக்கவில்லை.தரமற்ற பருத்தியை, அதிக விலை கொடுத்து, கொள்முதல் செய்வதால், நுாற்பாலைகளின் உற்பத்தி செலவினம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
வரும் பருவத்தில், இந்தியா, அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளிலும், பருத்தி உற்பத்தி அதிகரிக்கும் எனவும், இதையடுத்து அதன் விலை சரிவை காணும் எனவும், மதிப்பிடப் பட்டுள்ளது.இதை கருத்தில் கொண்ட, சர்வதேச வர்த்தகர்கள், உள்ளூர் ஜவுளிஉற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் மனதில் பருத்தி விலை குறையும் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது.
இதனால் வர்த்தகர்கள், நுாலிழை மற்றும் துணி கொள்முதலை வெகுவாக குறைத்து கொண்டுள்ளனர். வர்த்தக பாதிப்பு அதிகரிப்பால், நுாலிழை தேக்கமடைந்து, வருவாய் இழப்பு ஏற்படுகிறது.தற்போது, ஒரு கேண்டி பருத்தி, 43,600 ரூபாயாக உயர்ந்தே காணப்படுகிறது.
நெருக்கடி:வர்த்தக பாதிப்புகளால், ஏற்படும் வருவாய் இழப்பு காரணமாக, நுாற்பாலைகள் நுால் விலையை குறைத்து வருகின்றன.ஆக., 1ல், கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்த நுாலிழை விலை, மீண்டும் கிலோவுக்கு, 7 ரூபாய் குறைந்துள்ளது.இதுகுறித்து, கோவை ‘டெக்ஸ்பிரனர்ஸ்’ அமைப்பு இயக்குனர், இளங்கோ கூறியதாவது:
பருத்தி விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு போன்றவற்றால், தமிழக நுாற்பாலைகள் தொடர்ந்து நெருக்கடியை சந்தித்து வருகின்றன.விலை குறையும் என்ற எதிர்பார்ப்பில், ஜவுளி உற்பத்தியாளர்கள் நுாலிழை கொள்முதலை குறைத்து உள்ளனர். இதனால், நுாற்பாலைகளுக்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டு வருகிறது. இச்சூழலை சமாளிக்க, நுாலிழை விலை கிலோவுக்கு, மேலும், 7 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது.
மதிப்பீடு:வரும் ஆண்டில், வரலாறு காணாத அளவில் பருத்தி உற்பத்தி அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதிக இருப்பு உள்ளதால், சீனா, இந்திய பருத்தியை அதிகம் கொள்முதல் செய்யாது என்ற கருத்தும் நிலவுகிறது.எனினும், தற்போது, நுாலிழை ஏற்றுமதிக்கான விசாரணைகள் வரத்துவங்கியுள்ளன.பருத்தி விலை குறையும்; நிலைமை சீராகும் என்ற நம்பிக்கையுடன், நுாற்பாலைகள் காத்திருக்கின்றன.இவ்வாறு, இளங்கோ கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|