பதிவு செய்த நாள்
23 செப்2014
00:55
ஈரோடு :ஆயுத பூஜை நெருங்குவதால், பொரி தயாரிக்கும் பணியில், உற்பத்தியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகியவை, தமிழகத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை. அந்த நாளில், புத்தகங்கள், வாகனம், இயந்திரம், கருவி, ஆயுதங்களை வைத்து பூஜிக்கின்றனர். அந்த பூஜையில், பொரி, முக்கிய பூஜை பொருளாகக் கருதப்படுகிறது.எனவே, அதன் தயாரிப்பில் உற்பத்தியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
பணியாளர் பற்றாக்குறை:இதுகுறித்து, ஈரோடு, சூளை பகுதி பொரி உற்பத்தியாளர் சுப்ரமணி கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில், பணியாளர் பற்றாக்குறையால், மூன்று இடங்களில் மட்டுமே, பெரிய அளவில், பொரி தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.இதுதவிர, சிறிய அளவில், 50க்கும் மேற்பட்டோர் பொரி உற்பத்தி செய்து, மாவட்ட அளவில் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த, 20 ஆண்டுகளாக பொரி உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். தமிழகத்தில், ஆறு (180 நாள் பயிர்) மாதத்தில் விளையும் நெல் ரகங்களை பயன்படுத்தி, பொரியை உற்பத்தி செய்து, குறைந்த விலைக்கு விற்றோம்.தற்போது, தமிழகத்தில், ஆறு மாத காலப்பயிர் நடவு குறைந்து விட்டது. 90 முதல், 110 நாள் பயிர்களை நடவு செய்வதால், இந்த நெல் ரகங்களில் பொரி தயாரித்தால், கருகிவிடும் அல்லது உடைந்து, பக்குவம் வராது.
உடல் நலம்:அதனால், கர்நாடக மாநிலம் தாவணிக்கரை, மாண்டியா, மைசூரு போன்ற பகுதிகளில் இருந்து, மொத்தமாக நெல் கொள்முதல் செய்து, பொரி தயாரிக்கிறோம்.இதை, ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், காங்கேயம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சப்ளை செய்கிறோம்.எட்டு கிலோ கொண்ட ஒரு மூட்டை பொரியை, 480 ரூபாய்க்கு விற்கிறோம். கடந்தாண்டை விட, இந்தாண்டு, மூட்டைக்கு, 50 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.பண்டிகை நீங்கலாக, பிற காலத்தில், பானிபூரி, மிக்சர் உட்பட பல உணவுப் பொருள்களுடன் கலக்கவும், கோவில், வீடு, கடைகளில் தினசரி பூஜையில் வைக்கவும், ரெகுலராக பொரியை வாங்கிச் செல்கின்றனர்.கையால் தயாரிக்கப்படும் பொரி வகை, உடல் நலத்திற்கு ஏற்றது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|