பதிவு செய்த நாள்
22 அக்2014
00:27
மும்பை:நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக, மத்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளை அடுத்து, நேற்றைய பங்கு வியாபாரம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.இந்நிலையில், அன்னிய நிதி நிறுவனங்களும், பங்குகளை போட்டி போட்டு வாங்கியதை அடுத்து, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’, முறையே, 0.55 சதவீதம் மற்றும் 0.61 சதவீதம் ஏற்றம் கண்டன.
நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக, 2.63 சதவீதம் ஏற்றம் கண்டது. இதையடுத்து, மின்சாரம் (2.55 சதவீதம்), அடிப்படை கட்டமைப்பு (2.41 சதவீதம்) உலோகம் (1.71 சதவீதம்) ஆகிய துறைகளைச் சேர்ந்த குறியீட்டு எண்களும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்தன.அதேசமயம், எண்ணெய் – எரிவாயு மற்றும் மருந்து துறைகளைச் சேர்ந்த குறியீட்டு எண், முறையே, 0.77 சதவீதம் மற்றும் 0.13 சதவீதம் சரிவை கண்டன.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி, ஜூலை–செப்டம்பர் காலாண்டில், 7.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, சந்தை மதிப்பீட்டை விட சிறப்பாக உள்ளது என்ற நிலைப்பாட்டால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 145.80 புள்ளிகள் அதிகரித்து, 26,575.65 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், கெயில், பெல், விப்ரோ உள்ளிட்ட, 22 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், ஓ.என்.ஜி.சி., மகிந்திரா, ரிலையன்ஸ் உள்ளிட்ட, 8 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 48.35 புள்ளிகள் உயர்ந்து, 7,927.75 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|