பதிவு செய்த நாள்
29 அக்2014
23:46
மும்பை: சாதகமான சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால், பங்கு வர்த்தகம் நேற்று மிகவும் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
பல முன்னணி நிறுவனங்களின், சிறப்பான செயல்பாடுகளை, காலாண்டு நிதி நிலை முடிவுகள் எதிரொலித்தன. இதைத் தொடர்ந்து, அன்னிய நிதி நிறுவனங்கள், ஆர்வத்துடன் இந்திய பங்குகளை வாங்கி குவித்தன.இதையடுத்து, ‘சென்செக்ஸ்’ முறையே, 0.81 சதவீதம் அதிகரித்து, 27 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக, 2.97 சதவீதம் அதிகரித்தது.
இதையடுத்து, உலோகம் (2.63 சதவீதம்), மோட்டார் வாகனம் (1.79 சதவீதம்), தகவல் தொழில் நுட்பம் (1.47 சதவீதம்) ஆகிய துறைகளைச் சேர்ந்த குறியீட்டு எண்களும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்தன.அதேசமயம், இந்திய வங்கிகள், சொத்து மதிப்பை அதிகரிக்கும் வகையில், வாராக் கடன் வசூலில் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவில்லை.எனவே, இந்திய வங்கிகளின் தரக்குறியீடு, எதிர்மறை (நெகட்டிவ்) பட்டியலில் நீடிப்பதாக, சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடீஸ் தெரிவித்தது.
இதையடுத்து, வங்கி துறையைச் சேர்ந்த பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 217.35 புள்ளிகள் அதிகரித்து, 27,098.17 புள்ளிகளில் நிலைபெற்றது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹிண்டால்கோ, டாட்டா ஸ்டீல், இன்போசிஸ் உள்ளிட்ட, 21 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, டாக்டர் ரெட்டீஸ் உள்ளிட்ட, 9 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 62.85 புள்ளிகள் உயர்ந்து, 8,090.45 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|