பதிவு செய்த நாள்
02 பிப்2015
03:45
புதுடில்லி:ரிசர்வ் வங்கி, நாளை வெளியிட உள்ள நிதி சீராய்வு கொள்கையில், மீண்டும் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம், யாரும் எதிர்பாராத வகையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்து, 7.75 சதவீதமாக நிர்ணயித்தது. அதுபோல், வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் பெறும் கடனுக்கான, 'ரிவர்ஸ் ரெப்போ' வட்டி, 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 6.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம், சில்லரை பணவீக்கம், 5 சதவீதமாகவும், மொத்த விலை பணவீக்கம், 0.1 சதவீதமாகவும் குறைந்தது. இது மட்டுமின்றி, பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையால், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை சமாளிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.22,500 கோடி:சில தினங்களுக்கு முன், கோல் இந்தியாவின், 10 சதவீத பங்கு விற்பனை மூலம், மத்திய அரசுக்கு, 22,500 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதுதவிர, ஏற்கனவே செயில் நிறுவன பங்கு விற்பனை மூலம், 1,719 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மார்ச்சுக்குள், மேலும் பல பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை நடைபெற உள்ளது. இதனால், பங்கு விற்பனைக்கு நிர்ணயிக்கப்பட்ட, 43,425 கோடி ரூபாய் என்ற இலக்கை, மத்திய அரசு உயர்த்தும் என தெரிகிறது. இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால், நாட்டின் நடப்பு கணக்கு, பற்றாக்குறை என்ற நிலையில் இருந்து, உபரியாக வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
எதிர்பார்ப்பு:மேற்கண்ட காரணங்களால், ரிசர்வ் வங்கி, 'ரெப்போ' வட்டி விகிதங்களை, மேலும் 0.25 சதவீதம் அளவுக்கு குறைக்கும் என, தெரிகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இவ்வாண்டில், மொத்தம் ஒரு சதவீதம் வட்டி குறைப்பு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுவதாக, வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் தாக்கத்தால், வாகனம், வீடு உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறையும். அதே சமயம், டிபாசிட்டுகளுக்கான வட்டியும் குறையும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|