பதிவு செய்த நாள்
11 பிப்2016
18:04
மும்பை : சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்த நிலையில், இன்று (பிப்.11ம் தேதி) கடும் சரிவை சந்தித்தன. ஒரே நாளில் சென்செக்ஸ் 807 புள்ளிகளும், நிப்டி 239 புள்ளிகளும் வீழ்ச்சி அடைந்தன. இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.3 லட்சம் கோடி இழப்பாகியுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு வாரத்திற்கு மேலாகவே உலகளவில் பங்குச் சந்தைகளில் மந்தமான சூழலே நிலவி வருகிறது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் மந்தமாக இருந்து வந்தன. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிந்த நிலையில், இன்றும் சரிவு நிலை தொடர்ந்தது.
இன்றைய வர்த்தகம் துவங்கும் போது, சென்செக்ஸ் 148.20 புள்ளிகள் உயர்ந்து 23,610.70 ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 29.50 புள்ளிகள் சரிந்து 7,186.20-ஆகவும் இருந்தது. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சுணக்கம், குறிப்பாக ஹாங்காங் பங்குச்சந்தை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4 சதவீதம் சரிந்தது. இதன்காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் சரிவுடன் இருந்தன.
சென்செக்ஸ் 1665 புள்ளிகள் வீழ்ச்சி : இந்த நிலையில் மதியத்திற்கு மேல் பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்தன. வர்த்தகம் முடியும் போது மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 807.07 புள்ளிகள் சரிந்து 22,951.83-ஆக சரிந்தது.இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவாகும். கடந்த நான்கு நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 1665 புள்ளிகள் சரிந்துள்ளது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 239.35 புள்ளிகள் சரிந்து 6,976.35-ஆக முடிந்ததுடன் 7000 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது.
கடும் சரிவு ஏன்.?
பங்குச்சந்தைகள் கடுமையாக சரிய கீழ்க்கண்ட காரணங்கள் சொல்லப்படுகிறது. அவை:
* அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தப் போவதாக வெளியான தகவல்...* ரூபாயின் மதிப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூ.68.29ஆக சரிந்தது...* ஹாங்காங் பங்குச்சந்தை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது* அந்நிய முதலீடுகள் அதிகளவில் வெளியேறியது* முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது
3 லட்சம் கோடி இழப்பு : பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவால் இன்று அநேக பங்குகள் சரிவுடன் முடிந்தன. இதனால் இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.3 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இன்றைய வர்த்தகத்தில் 2343 நிறுவன பங்குகள் சரிந்தும், 342 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 93 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|