பதிவு செய்த நாள்
04 மார்2016
06:35
புதுடில்லி : உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பியட், இந்தியாவில், விற்பனை சரிவால், கடந்த, 50 ஆண்டுகளில் இல்லாத அளவு நெருக்கடியை சந்தித்து வருகிறது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த, பியட் கார் நிறுவனம், இந்தியாவில், பியட் ஆட்டோ மொபைல்ஸ் இந்தியா என்ற பெயரில், செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் ஜீப்புகளை தயாரித்து வந்த இந்நிறுவனம், பின்னர், இந்திய சந்தையில் கார்கள் மூலம், கால் பதிக்க துவங்கியது. ஒரு காலத்தில், இந்தியாவின் கார் மார்கெட்டில் தனக்கென இடம் பிடித்து இருந்தது. டாடா உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் இணைந்து தொழில் செய்து வந்தது. ஆனால், பியட் நிறுவனத்தின் விற்பனை சமீபகாலமாக சரிந்து வருகிறது. கடந்த, 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், 2016, ஜனவரி வரையிலான காலத்தில், இதன் விற்பனை, இந்தியாவில், 23 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த, 2015ம் ஆண்டில் மட்டும், பியட் வாகனங்கள், 8,575 என்ற அளவில் இந்தியாவில் விற்பனையாகிஉள்ளன. அதேசமயம், பல மடங்கு விலை கொண்ட, சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான, மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் கூட, 13 ஆயிரத்து, 502 கார்களை விற்பனை செய்துள்ளது. முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான மாருதி, ஹுண்டாய் போன்றவை, புதிய புதிய மாடல்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், பியட் நிறுவனம், 2014ம் ஆண்டிற்கு பிறகு, புதிய மாடல்களை அறிமுகம் செய்யவில்லை. அடுத்த ஆண்டு வரை, கார் தயாரிப்பில் புதிய முயற்சி எதையும் செய்யப் போவதில்லை. அதே சமயம் ஜீப் வாகன தயாரிப்பில் கவனம் செலுத்தப் போவதாகவும் பியட் இந்தியா நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|