பதிவு செய்த நாள்
02 மே2016
00:17
புதுடில்லி : ‘மாறி வரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, காப்பீட்டு நிறுவனங்கள் தயாராவது அவசியம்’ என, அசெஞ்சர் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்: இந்தியா உட்பட, உலக நாடுகளைச் சேர்ந்த, 445 காப்பீட்டு நிறுவனங்களிடம், டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் பெரும்பான்மையான நிறுவனங்கள், ஆண்டுக்கு, 600 கோடி டாலருக்கும் அதிகமாக வருவாய் ஈட்டுபவை. இந்நிறுவனங்களின், ‘சி – லெவல்’ உயரதிகாரிகள், இயக்குனர்கள் உள்ளிட்டோர், அடுத்த மூன்று ஆண்டுகளில், டிஜிட்டல் தொழில்நுட்பம், காப்பீட்டு துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என, தெரிவித்தனர். அதற்கேற்ப, காப்பீட்டு நிறுவனங்கள் தங்களை தயார்படுத்திக் கொள்வது அவசியம் என, அவர்கள் கூறினர்.
குறிப்பாக, இணையம் சார்ந்த நடைமுறைகள், சுற்றுச்சூழல் வடிவமைப்பு திட்டங்கள், செயற்கை நுண்ணறிவு சாதனங்களின் மேம்பட்ட செயல் திறன் போன்றவை, காப்பீட்டு துறையில் அலையென பரவும் என, 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் தெரிவித்தனர். இந்த அலையை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளும் நிறுவனங்கள், காப்பீட்டு துறையில் நிலைத்து நிற்கும். காப்பீட்டு நிறுவனங்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், பகுத்தாய்வாளர்கள் போன்றவர்களை தான் பணிக்கு நியமிக்கின்றன. அவை, தற்போது பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கணித வல்லுனர்களை நியமிக்க துவங்கியுள்ளன. பணியாளர்களுக்கு உதவ, ஏராளமான உள்ளீடுகளை தன்னிச்சையாக ஆராய்ந்து தொகுத்தளிப்பது, கடினமான கணித நடைமுறைகளுக்கு தீர்வு காண்பது போன்றவற்றுக்கான, தொழில்நுட்ப சாதனங்களையும் பயன்படுத்த துவங்கியுள்ளன.
இதுபோன்ற டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு, வரும் ஆண்டுகளில், பெருகும். அதற்கேற்ப, காப்பீட்டு நிறுவனங்கள், பாரம்பரிய நடைமுறைகளில் இருந்து, நவீன தொழில்நுட்ப பயன்பாடு, பணியாளர் தேர்வில் புதிய சிந்தனை போன்றவற்றை மேற்கொள்வது அவசியம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|