பதிவு செய்த நாள்
04 மே2016
00:49
வாஷிங்டன் : ‘இந்தியாவில் சுலபமாக தொழில் புரிவதற்கு தடையாக உள்ள கட்டுப்பாடுகளையும், வரி விதிப்புகளையும் நீக்க வேண்டும்’ என, அமெரிக்க நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
அமெரிக்காவில், அடுத்த மாத துவக்கத்தில், அணு பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில், பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, அதிபர் ஒபாமாவை சந்திப்பதுடன், அமெரிக்க பார்லி மென்ட் கூட்டுக் கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இந்திய தொழில் துறையில் உள்ள தேவையற்ற கட்டுப்பாடுகள், வரி விதிப்புகள் ஆகியவற்றை நீக்குமாறு, மோடிக்கு, ஒபாமா அழுத்தம் கொடுக்க வேண்டும் என, அமெரிக்க தயாரிப்பாளர்கள் சங்கமான, ‘நாம்’ வலியுறுத்தியுள்ளது. இந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரி ஜே டிம்மன்ஸ், அமெரிக்க வர்த்தக அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கெர் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி மைக்கேல் புரோமன் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதன் விவரம்: இந்தியா – அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாக பொருளாதார உறவு உள்ளது. இருந்தபோதிலும், இரு நாடுகளின் பரஸ்பர வர்த்தகமும், முதலீடுகளும் மிகக் குறைவாகவே உள்ளன. கடந்த, 2014ல் இந்திய பிரதமராக மோடி பொறுப்பேற்றதும், ‘இந்தியாவில் சுலபமாக தொழில்புரிய நடவடிக்கை எடுக்கப்படும்; அன்னிய முதலீடுகளை ஈர்க்க, சந்தைகள் திறந்து விடப்படும்’ என்றார். அதனால், இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக வளர்ச்சிக்கு தடையாக உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, இரு முறை பரஸ்பரம் உயர்மட்ட வர்த்தக பேச்சும் நடைபெற்றது. எனினும், இந்தியாவில் தொழில் துவங்குவதை மேலும் சுலபமாக்க வேண்டும்.
இந்தியா, நவீன தயாரிப்பு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், முதலீடுகளை ஈர்த்து, வளர்ச்சி காணலாம். அமெரிக்க தயாரிப்பாளர்கள், நீண்ட காலமாக இந்தியதொழில் துறையில், வணிக ரீதியில் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். அவற்றுக்கு தீர்வு கண்டால், அமெரிக்க நிறுவனங்கள், இந்தியாவில் தாராளமாக முதலீடு செய்ய காத்திருக்கின்றன. குறிப்பாக, இந்தியா, மேலும் பல துறைகளில் தாராளமயமாக்கல் கொள்கையை அமல்படுத்த வேண்டும். பாரபட்சமான நடைமுறைகளை நீக்க வேண்டும். அறிவுசார் சொத்துரிமையை பாதுகாக்க, முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இந்த அம்சங்களை பிரதமர் மோடியிடம், அதிபர் ஒபாமா வலியுறுத்தி, இந்திய வணிகத்தில் உள்ள தடைகற்களை அகற்ற வேண்டும். அதன் மூலம், இந்தியா – அமெரிக்கா இடையிலான பரஸ்பர வர்த்தகம் மேலும் செழிக்கும்.அவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|