பதிவு செய்த நாள்
08 மே2016
07:03
மும்பை:கடந்த 2015ல், இந்தியா வந்த வெளிநாட்டு பயணிகளின் வருகை அதிகரித்துள்ள போதிலும், முந்தைய இரு ஆண்டுகளின் வளர்ச்சியை ஒப்பிடும்போது குறைவாக உள்ளது. இந்தியாவுக்கு, 2015ல் வந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை, 4.55 சதவீதம் வளர்ச்சி கண்டு, 80.30 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 2013, 2014ம் ஆண்டுகளில், இந்தியா வந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை, முறையே, 69.70 லட்சம் மற்றும் 76.80 லட்சம் ஆக இருந்தது.
ஆக, 2015ல், சுற்றுலா பயணிகள் வருகை வளர்ச்சி, 4.70 சதவீதம் குறைந்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வாயிலான அன்னிய செலாவணி வருவாய் வளர்ச்சி, 2.8 சதவீதம் குறைந்து, 1,960 கோடி டாலராக சரிவடைந்து உள்ளது. கடந்த 2014ல், வெளிநாட்டு பயணிகள் வருகை மற்றும் அன்னிய செலாவணி வருவாய், முறையே, 10.2 சதவீதம் மற்றும், 9 சதவீதம் அதிகரித்து காணப்பட்டது.
இதுகுறித்து, வேர்ல்டு டிராவல் அண்டு டூரிசம் கவுன்சிலின், இந்திய பிரிவு தலைவர் கபில் சோப்ரா கூறுகையில், ‘‘மத்திய அரசு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்க, ‘இ – விசா’ அறிமுகம் உள்ளிட்ட, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுகுறித்து, வெளிநாடுகளில் பரவலாக பிரசாரம் செய்ய தவறியதால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளது,’’ என்றார்.‘‘இந்தியா, 14 நாடுகளில் சுற்றுலா அலுவலகங்களை திறந்துள்ள போதிலும், 12 அலுவலகங்களில், உயர்மட்ட அதிகாரிகள் நியமிக்கப்படாமல் உள்ளனர்.
அதனால், இந்திய சேவைகளை பலர் அறியாமல் உள்ளனர்,’’ என, இந்திய சுற்றுலா மற்றும் ஓட்டல்கள் சங்க கூட்டமைப்பின் துணை தலைவர் சரப்ஜித் சிங் தெரிவித்தார்.
மத்திய அரசு, மின்னணு விசா நடைமுறையை, 2014 நவம்பரில் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், வலைதளம் வாயிலாக விசாவுக்கு விண்ணப்பித்து, பணம் செலுத்தி, இந்தியா வந்திறங்கி விசா பெற்றுக் கொள்ளலாம். இந்த மின்னணு விசாவை பயன்படுத்த, 43 நாடுகளுக்கு முதலில் அனுமதி வழங்கப்பட்டது. இது, இந்தாண்டு பிப்ரவரியில், 150 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சுலபமான இந்த மின்னணு விசாவால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை, 11 மடங்கு அதிகரித்து, 4.45 லட்சமாக அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும், 2015ல் இந்தியா வந்த, 80.30 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் ஒப்பிடுகையில், இது, 5.5 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது. ‘மின்னணு விசாவுக்கான வலைதளம், அவ்வப்போது கோளாறாகி முடங்கி விடுகிறது. பணம் செலுத்துவதிலும், அடிக்கடி சிக்கல் ஏற்படுகிறது. இதனால், விசா நடைமுறை தாமதமாகிறது’ என, இதற்கு சுற்றுலா துறையினர் பல காரணங்களை கூறுகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|