பதிவு செய்த நாள்
23 மே2016
08:06
நான்காவது கட்டமாக வெளியிட இருப்பது மற்றும் பங்குச்சந்தையில் பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் தங்க சேமிப்பு பத்திரங்கள் மீதான ஈர்ப்பை அதிகமாக்குமா?
தங்க சேமிப்பு திட்டங்களை மேலும் பிரபலமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வரும் நிலையில், விரைவில் தங்க சேமிப்பு பத்திரங்கள் நான்காம் கட்டமாக வெளியிடப்பட இருக்கின்றன. இம்மாத இறுதி முதல் இந்த பத்திரங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு, பரிவர்த்தனை செய்யப்படவும் உள்ளன. இதனால் தங்க சேமிப்பு பத்திரங்கள் மீது முதலீட்டாளர்கள் மத்தியில் பரவலான எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தங்க டிபாசிட் திட்டம், தங்க சேமிப்பு பத்திரங்கள் மற்றும் தங்க நாணயம் ஆகிய மூன்று திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தங்கத்தின் இறக்குமதியை குறைப்பது மற்றும் இல்லங்களிலும், கோவில்களிலும் முடங்கி கிடக்கும் தங்கத்தை, புழக்கத்தில் கொண்டு வருவது ஆகியவை இந்த திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருக்கின்றன.
தங்க பத்திரங்கள் தங்க டிபாசிட் திட்டத்தின் கீழ், வங்கிகள் குறிப்பிட்ட காலம் தங்கத்தை டிபாசிட் செய்து அதற்கான வட்டியை பெற்றுக்கொள்ளலாம். முதிர்வு காலத்தில் அப்போதைய விலையில் தங்கம் பெற்றுக்கொள்ளலாம்.நகை வடிவில் தங்கம் வாங்குவதற்கு பதிலாக, பத்திர வடிவில் தங்கத்தில் முதலீடு செய்ய தங்க சேமிப்பு பத்திரங்கள் வழி செய்கின்றன. ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடப்படும் இந்த பத்திரங்களை, 2 கிராம் முதல் 500 கிராம் வரை முதலீடு செய்யலாம். இவற்றின் முதிர்வு காலம் 8 ஆண்டுகளாகும். 5ம் ஆண்டு முதல் வெளியேறும் வாய்ப்பும் இருக்கிறது. முதிர்வு காலத்தில், அப்போதைய தங்க விலைக்கான தொகையை பெறலாம். மேலும், இடைப்பட்ட காலத்தில், இந்த பத்திரங்களுக்கு 2.75 சதவீத வட்டியும் வழங்கப்படும். தேவை எனில், இவற்றை அடமானம் வைத்தும் கடன் பெறலாம். வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் மூலம் இவற்றை வாங்கலாம்.
இதுவரை கடந்த நவம்பர் மாதம் முதல் கட்டம் தங்க சேமிப்பு பத்திரங்கள் வெளியிடப்பட்டன. அதன் பிறகு மேலும் இரண்டு கட்டங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை 1,300 கோடி ரூபாய் இவற்றின் மூலம் திரட்டப்பட்டுள்ளது. முதல் கட்ட பத்திரம் கிராமுக்கு 2,682 ரூபாய் எனும் விலையில் வெளியானது. 999 துாய தங்கத்தின் சந்தை விலை அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது.இந்நிலையில், விரைவில் நான்காவது கட்டமாக தங்க சேமிப்பு பத்திரங்கள் வெளியிடப்பட உள்ளன. அண்மையில் வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியுடன் தங்க சேமிப்பு திட்டங்கள் தொடர்பாக நடத்திய ஆலோசனைக்குப் பிறகு நிதி அமைச்சகம் இவ்வாறு முடிவு செய்துள்ளது. இந்த திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வங்கிகள் இந்த திட்டத்தை மேலும் தீவிரமாக பங்கேற்கவும் கேட்டுக் கொள்ளப்பட உள்ளன. சான்றிதழ்கள் வெளியிடப்படும் நடைமுறையும் எளிதாக்கப்பட உள்ளது.
முதலீடு வாய்ப்பு மேலும், இம்மாத இறுதியில், தங்க சேமிப்பு பத்திரங்களை பங்குச்சந்தையில் பட்டியலிட்டு பரிவர்த்தனை செய்வதும் துவங்க உள்ளதாக நிதி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் தங்கத்தின் மதிப்பு உயர்ந்திருப்பது மற்றும் பங்குச்சந்தை பரிவர்த்தனை மூலம் விற்கும் வாய்ப்பு இந்த முறை இவற்றின் ஈர்ப்பை அதிகமாக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.தங்கத்தில் முதலீடு செய்பவர்கள், நகை வடிவில் வாங்குவதை விட, பத்திரங்களை வாங்குவது ஏற்றதாக இருக்கும் என கருதப்படுகிறது. முதலீடு காலத்தில், வட்டி வருமானம் மற்றும் பத்திரமாக இருப்பதால், பாதுகாப்பானது போன்ற அம்சங்கள் சாதகமானதாக அமைந்து உள்ளன. இவற்றின் வட்டி வருமானம் வரி விதிப்புக்கு உட்பட்டது என்றாலும், முதிர்வின் போது இவற்றின் மீது ஆதாய பலன் வரிவிதிப்பு கிடையாது.
மேலும், இவை பங்குச்சந்தையில் பரிவர்த்தனை செய்யப்பட இருப்பது தேவை எனில், இவற்றை விற்று பணமாக்குவதை எளிதாக்கும். இதன் காரணமாக தங்கத்தில் முதலீடு செய்ய தீர்மானித்து உள்ளவர்களுக்கு இவை நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் கருதப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|