பதிவு செய்த நாள்
27 மே2016
07:11
பெங்களுரு : ‘இந்தியாவில், வணிக வளாகங்கள், அலுவலக கட்டடங்கள் ஆகியவற்றில், ஆர்.ஐ.இ.டி., திட்டத்தின் கீழ், 3.60 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, முதலீட்டு வாய்ப்புகள் காத்திருக்கின்றன’ என, ‘குஷ்மன் அண்டு வேக்பீல்டு’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள், மூலதனச் சந்தையில் பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டிக் கொள்கின்றன. அது போல, ரியல் எஸ்டேட் துறை சார்ந்த, வணிக வளாக நிறுவனங்கள், ஆர்.ஐ.இ.டி., எனப்படும் ‘ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்’ மூலம், ‘யூனிட்’களை வெளியிட்டு, நிதி திரட்டிக் கொள்ளலாம். பரஸ்பர நிதி திட்டம்போல, ஆர்.ஐ.இ.டி., யூனிட்டுகள், பங்குச்சந்தையில் பட்டியலிடப் பட்ட பின், அவற்றின் மீது வர்த்தகம் நடைபெறும்.
பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யின் விதிமுறைகளை பூர்த்தி செய்யும், வர்த்தக ரீதியிலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மட்டுமே, ஆர்.ஐ.இ.டி., திட்டத்தின் கீழ், நிதி திரட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, ஆர்.ஐ.இ.டி.,யின் கீழ், நிதி திரட்ட தகுதி வாய்ந்த, வர்த்தக ரீதியிலான ரியல் எஸ்டேட் திட்டங்களை, குஷ்மன் அண்டு வேக்பீல்டு ஆய்வு செய்துள்ளது. அதில், சென்னை, பெங்களுரு, மும்பை உள்ளிட்ட எட்டு நகரங்களில், 2.88 – 3.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, முதலீடு செய்யக் கூடிய, வணிக வளாகங்கள், வர்த்தக அலுவலக கட்டடங்கள் ஆகியவை இருப்பது தெரிய வந்துள்ளது.
இதில், பெங்களூரு, அதிக அளவில் முதலீட்டு வளர்ச்சியை கொண்ட நகரம் என்ற வகையில், முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு, 1.05 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, ஆர்.ஐ.இ.டி., தகுதி பெற்ற வர்த்தக கட்டடங்கள் உள்ளன. அடுத்த இடத்தில், மும்பை உள்ளது. இந்நகரில், வர்த்தக ரியல் எஸ்டேட் சந்தையின் மதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு, 96 ஆயிரத்து, 461 கோடி ரூபாய் மதிப்பிற்கு, முதலீட்டு வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
டில்லி – தேசிய தலைநகர் பிராந்தியம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இங்கு, 73 ஆயிரத்து, 423 கோடி ரூபாய் அளவிற்கு, வர்த்தக வளாகங்கள், முதலீடுகளை ஈர்க்கும் தகுதியுடன் காணப்படுகின்றன என, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை, பெங்களூரு, டில்லி – தேசிய தலைநகர் பிராந்தியம், மும்பை, புனே, ஐதராபாத், ஆமதாபாத், கோல்கட்டா ஆகிய எட்டு நகரங்களில், 31.50 கோடி சதுர அடி பரப்பிலான அலுவலக வளாகங்கள், ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் மூலம் முதலீடு செய்வதற்கான தகுதியுடன் உள்ளன.இதில், பெங்களூரு, மும்பை, டில்லி – தேசிய தலைநகர் பிராந்தியம் ஆகியவற்றின் பங்களிப்பு மட்டும், 67 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|