பதிவு செய்த நாள்
29 மே2016
01:11
புதுடில்லி:‘‘இரு ஆண்டுகளில், இந்திய உணவு பதப்படுத்துதல் துறையில், அன்னிய நிறுவனங்களின்் முதலீடு, 100 கோடி டாலரை தாண்டும்,’’ என, மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ஈராண்டு சாதனைகள் குறித்து, அவர் கூறியதாவது:இந்தியாவில் உற்பத்தியாகும் காய்கறிகள் மற்றும் பழங்களில், 10 சதவீதம் தான், பதப்படுத்தப்படுகின்றன. பதப்படுத்தி பாதுகாக்க, போதுமான வசதிகள் இல்லாததால், காய்கறிகளும், பழங்களும் வீணாகின்றன. இதனால், தங்கள் விளைபொருளுக்கு, உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
உணவுப் பூங்கா:இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில், உணவுப் பூங்காக்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும், 2019ம் ஆண்டிற்குள், நாடு முழுவதும், 42 உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும். இதில், 17 பூங்காக்களுக்கு, தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு உணவு பூங்காவிற்கு, தலா, 50 கோடி ரூபாய் வீதம், மத்திய அரசு மானியம் ஒதுக்கியுள்ளது. கடந்த இரு ஆண்டுகளில், ஏழு உணவுப் பூங்காக்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், 10 ஆண்டு ஆட்சியில், இரண்டு உணவு பூங்காக்கள் மட்டுமே திறக்கப்பட்டன. கடந்த 2015 – 16ம் நிதியாண்டில், பிப்ரவரி வரையிலான, 11 மாதங்களில், உணவு பதப்படுத்துதல் துறையில், 46.30 கோடி டாலர் அளவிற்கு அன்னிய நேரடி முதலீடு குவிந்தது. நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டு பட்ஜெட்டில், உணவு பதப்படுத்துதல் துறையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம், உணவு பதப்படுத்துதல் துறையை ஊக்குவிக்கும் வகையில், சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த இரு அம்சங்களும், உணவு பதப்படுத்துதல் துறையில், அன்னிய முதலீடுகளை ஈர்க்கும். அதனால், அடுத்த இரு ஆண்டுகளில், உணவு பதப்படுத்துதல் துறையில், அன்னிய நேரடி முதலீடு, 100 கோடி டாலரை தாண்டும். நாடு முழுவதும், 30 குளிர்பதன கிடங்குகளை அமைக்க, அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
விவசாயிகளுக்கு...இத்தகைய நடவடிக்கைகளால், காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில், பதப்படுத்தப்படுபவற்றின் பங்கு, இரு மடங்கு உயர்ந்து, 20 சதவீதமாக அதிகரிக்கும். காய்கறிகள், பழங்கள் ஆகியவை வீணாவது கட்டுப்படுத்தப்படும் என்பதால், அவற்றை பயிரிடும் விவசாயிகளுக்கு, நல்ல விலை கிடைக்கும். அதேசமயம், நுகர்வோருக்கும், குறைந்த விலையில், காய்கறிகள், பழங்கள் ஆகியவை கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|