பதிவு செய்த நாள்
24 ஜூன்2016
17:50
மும்பை : ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற இருப்பதன் செய்தி எதிரொலியாக இந்திய உள்ளிட்ட உலக பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டதால் முதலீட்டாளர்களுக்கு இன்றைய தினம் கருப்பு வெள்ளியாக மாறியது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 52 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருத்துள்ளனர், இதனால் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுகிறது. இதனால் பிரிட்டனின் பவுண்ட் மதிப்பு கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1.39 பவுண்ட்டாக சரிந்தது. மேலும் பிரிட்டனின் இந்த முடிவால் இந்திய பங்குச்சந்தைகள் மட்டுமல்ல, ஆசியா, ஐரோப்பிய உள்ளிட்ட உலகளவிலும் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. இதனால் இன்றைய தினம் உலகளவில் பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளியாக அமைந்தன.
இன்றைய தினம் பங்குச்சந்தைகள் துவங்கும்போதே சரிவுடன் ஆரம்பித்தன. நேரம் செல்ல செல்ல ரூபாயின் மதிப்பு சரிந்ததன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. ஒருக்கட்டத்தில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளும், நிப்டி 300 புள்ளிகளும் சரிந்தன. இருப்பினும் வர்த்தகம் முடியும்தருவாயில் சில முக்கிய நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதால் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவிலிருந்து சற்று மீண்டது.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 604.51 புள்ளிகள் சரிந்து 26,397.71-ஆகவும், நிப்டி 181.85 புள்ளிகள் சரிந்து 8,088.60-ஆகவும் முடிந்தன. இந்திய பங்குச்சந்தைகளில் இன்று ஏற்பட்ட சரிவால் மட்டும் முதலீட்டாளர்களின் மொத்த சொத்து மதிப்பில் ரூ.1.79 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 23 நிறுவன பங்குகள் சரிந்து முடிந்தன. குறிப்பாக டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், பாரத் ஃபோர்க், இன்போசிஸ், டிசிஎஸ்., உள்ளிட்ட நிறுவன பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|