பதிவு செய்த நாள்
27 ஜூன்2016
07:32
உங்கள் முதலீட்டு தேர்வுகளை விட, சேமிக்கும் பழக்கம் தான் முக்கியமானவை என்கிறார், ஆண்ட்ரூ ஹல்லம். செல்வந்தராவதற்கான வழி வரவுக்குள் செலவுகளை கட்டுப்படுத்துவதிலும், கடன் வலையில் சிக்காமல் இருப்பதிலும், உபரியை முதலீடு செய்வதிலும் தான் இருக்கிறது என்று கூறுபவர், ‘மில்லியனர் டீச்சர்’ எனும் புத்தகத்தில் வளமான நிதி வாழ்க்கைக்கான வழிகளை விவரிக்கிறார்.
கனடா நாட்டைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியரான ஹல்லம், சுயமாக சம்பாதித்து இளம் வயதில் லட்சாதிபதியானவர். அந்த அனுபவத்தின் மூலம் பெற்ற பாடங்களை அவர் மற்றவர்களுக்காக விளக்கியுள்ளார்.
* பெரும்பாலானோர் தங்களை செல்வந்தராக தோன்றச் செய்வதற்காக செலவு செய்கின்றனர். கடன் வாங்கி சொகுசு கார்களில் பயணம் செய்கின்றனர்; விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இவை, ஒருவரை பணக்காரர் போல உணரச் செய்யலாம். ஆனால், பணக்காரராக ஆவதற்கு உதவாது. உண்மையில், எதிர்மறையான பலனே உண்டாகும். நிஜமான லட்சாதிபதிகள் எப்படி செலவு செய்கின்றனர் என்பது உங்களை வியப்பில் ஆழ்த்திவிடும். லட்சாதிபதிகள் ஆடம்பர செலவுகள் செய்வதில்லை. சிக்கனமாக இருந்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். வருவாய்க்குள் செலவுகள் இருக்க வேண்டும். வருவாய்க்குள் செலவுகளை கட்டுப்படுத்தி, உபரியை சரியான முதலீடு செய்வது தான், செல்வந்தராவதற்கான உறுதியான வழி
* காலமும், கூட்டு வட்டியும் தான் உங்களது மிகச்சிறந்த நண்பன். முடிந்த வரை இளம் வயதில் முதலீட்டை துவக்குங்கள். இதன் மூலம் நீண்ட கால நோக்கில் கூட்டு வட்டியின் பலனை பெறலாம். முதலீட்டு வல்லுனரான வாரென் பப்பே இந்த முறையை தான் பின்பற்றினார். அவரைப் போலவே நீங்களும் பின்பற்றி பலன் பெறலாம். இளம் வயதில் முதலீடு செய்யத் துவங்குவது தான் உங்களுக்கு நீங்கள் அளிக்கக் கூடிய மிகச்சிறந்த பரிசாக இருக்கும்
* பொருட்களை தள்ளுபடியில் அல்லது விலை குறையும் போது வாங்குகிறோம். ஆனால், பங்குகளை பொறுத்தவரை அவற்றின் விலை குறையும் போது குறைவாக வாங்குகிறோம்; விலை அதிகமாகும் போது அதிகம் வாங்குகிறோம். சந்தையின் ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்படாமல் முடிவு எடுக்க வேண்டும். சராசரி முதலீட்டாளர்களுக்கும், அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்களுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. சராசரி முதலீட்டாளர்கள், பங்குகளின் விலை சரியும் போது மோசமாக உணர்கின்றனர். ஆனால், அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள், சரிந்த பங்குகளில் மதிப்பை பார்க்கின்றனர்
* உங்களுக்கு சம அளவிலான உணவு தேவை. முதலீட்டிற்கும் இது பொருந்தும். பங்குகள் உள்ளிட்ட முதலீடுகள் பரவலாக அமைய வேண்டும். போதுமான அளவு பத்திரங்களிலும் முதலீடு செய்ய வேண்டும்
* அதிக வட்டி போன்றவற்றுக்கு ஆசைப்பட்டு செயல்படக் கூடாது. சுலபமாக பணம் சேரும் வழி என்று எதுவும் இல்லை.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|