பதிவு செய்த நாள்
29 ஜூன்2016
07:35
புதுடில்லி : ‘சீனாவில் இருந்து மலிவு விலையில் இறக்குமதியாகும், ‘ரேடியல்’ டயர்களுக்கு, பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க வேண்டும்’ என, வாகன டயர் தயாரிப்பாளர்கள் சங்கம், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்திற்கு, கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் விவரம்: கடந்த, ஏப்., – மே மாதங்களில், சீனாவில் இருந்து, 2.80 லட்சம் டி.பி.ஆர்., எனப்படும், டிரக் மற்றும் பஸ்களுக்கான ரேடியல் டயர்கள் இறக்குமதியாகியுள்ளன. இது, கடந்த ஆண்டு, இதே மாதங்களில், 1.80 லட்சமாக இருந்தது.
கடும் சவால்கடந்த, மே மாதத்தில் மட்டும், 1.50 லட்சம் டி.பி.ஆர்., டயர்கள் இறக்குமதியாகி உள்ளன. இது, பழைய டயர்களுக்கு மாற்றான புதிய டயர் சந்தையின் தேவையில், 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்., – மே மாதங்களில், டி.பி.ஆர்.,மற்றும் கார்களுக்கான ரேடியல் டயர்களின் இறக்குமதி, முறையே, 57 சதவீதம் மற்றும் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால், உள்நாட்டு டயர் தொழிலும், அதை சார்ந்துள்ள ரப்பர் விவசாயமும் பாதிக்கப்படும். அதனால், இறக்குமதியாகும் சீனாவின் மலிவு விலை டயர்கள் மீது, உடனடியாக, பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க வேண்டும். இந்திய டயர் துறை வருவாயில், டி.பி.ஆர்., பிரிவின் பங்கு, 55 சதவீதத்திற்கும் மேலாக உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவில் குவிந்து வரும் சீனாவின் மலிவு விலை டயர்களால், உள்நாட்டு டயர்களுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால், பல நிறுவனங்கள், டயர் தயாரிப்பை குறைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. மதிப்பீட்டு காலத்தில், டி.பி.ஆர்., இறக்குமதியில், சீனாவின் பங்கு, இதுவரை இல்லாத வகையில், 95 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, 2015ல், 70 சதவீதமாகவும், 2014ல், 40 சதவீதம் என்ற அளவிலும் இருந்தது.
சீன டயர் ஒன்றின் விலை, இந்தியாவில், டயர் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலையை விட குறைவாக உள்ளது. இது, இந்திய டயர் நிறுவனங்களுக்கு கடும் சவாலாகவும், அதேசமயம் பெரும் பாதிப்பை உண்டாக்கக் கூடியதாகவும் உள்ளது.
அமெரிக்காவில்...ரேடியல் டயர்களுக்கு மவுசு அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள், அவற்றின் உற்பத்தியை அதிகரிக்க, 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன. இந்நிலையில், சீனாவின் மலிவு விலை ரேடியல் டயர்கள் தொடர்ந்து இறக்குமதியானால், கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும். அமெரிக்கா, சீன டயர்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த, பொருள் குவிப்பு தடுப்பு வரி, மானியங்கள் தடுப்பு வரி போன்றவற்றை விதித்துள்ளது. அதனால், சீன டயர் நிறுவனங்கள், இந்தியாவை குறிவைத்து, டயர்களை குவித்து வருகின்றன. அதனால், மத்திய அரசு, உடனடியாக சீன டயர் இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|