பதிவு செய்த நாள்
28 ஜூலை2016
05:22
புதுடில்லி : ‘‘சீன நிறுவனங்கள், இந்தியாவில் காப்புரிமை பெற்ற பொருட்களை போலியாக தயாரித்து, அவற்றை இந்தியாவிற்கே ஏற்றுமதி செய்வதால், உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப் படுகின்றன,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: சீன நிறுவனங்கள், காப்புரிமை சட்டத்தை மீறும் வகையில், இந்திய நிறுவனங்களின் பிராண்டு பொருட்களை, போலியாக தயாரித்து, இந்தியாவிற்கே ஏற்றுமதி செய்கின்றன. இந்தியாவின், நட்ராஜ், ரேமண்ட், ஜே.கே. பைல்ஸ் அண்டு டூல்ஸ், பெவிகால், ஒனிடா, கோத்ரெஜ், போரோபிளஸ், டாபர், மிதா அண்டு கம்பெனி போன்ற புகழ் பெற்ற பிராண்டுகளின் பொருட்களை, சீன நிறுவனங்கள் போலியாக தயாரித்து, ஏற்றுமதி செய்கின்றன. இந்திய நிறுவனங்களின் ஒரு சில அகர்பத்தி பிராண்டுகளையும், சீனா ஏற்றுமதி செய்கிறது.
அச்சு அசலாக...இந்தியாவைச் சேர்ந்த, கனிடி காஸ்மெசிடிக்கல்ஸ் நிறுவனம், இமாச்சல பிரதேசத்தில், சோலான் நகரில் உள்ள தொழிற்சாலையில், ‘லோட்டஸ், லக்மே’ பிராண்டுகளில், அழகுப் பொருட்களை தயாரித்து வருகிறது. இப்பொருட்களை, அச்சு அசலாக,சீன நிறுவனங்கள் தயாரித்து ஏற்றுமதி செய்துள்ளன. சிவா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம், 11 லட்சத்து, 34 ஆயிரத்து, 360 ரூபாய் மதிப்புள்ள அப்பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.இதே நிறுவனம், இந்தியாவில், இந்துஸ்தான் யுனிலிவர், செச்வன் ஸ்டாபிலோ ஆகிய நிறுவனங்களின், ‘லாக்மி, பாண்ட்ஸ், பேர் அண்டு லவ்லி’ போன்ற அழகு பொருட்களின் போலிகளையும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.
சீனாவில் இருந்து சமீபத்தில் இறக்குமதியான இந்த போலிப் பொருட்களை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்தியாவில் காப்புரிமை பெற்ற பொருட்களை, சீன நிறுவனங்கள் போலியாக தயாரித்து அனுப்புவதால், தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, உள்நாட்டு நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளன. இதையடுத்து, பீஜிங்கில் உள்ள இந்திய துாதரகம், இப்பிரச்னையை, சீன அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
வழக்குசீன அரசு, ‘முதலில் வருவோருக்கே காப்புரிமை’ என்ற கொள்கையை கடைபிடிக்கிறது. அதை பின்பற்றி, இந்தியாவைச் சேர்ந்த சில நிறுவனங்களின் பொருட்களுக்கு, சீன அரசு, காப்புரிமை வழங்கியுள்ளது. எனினும், காப்புரிமை மீறல் தொடர்பாக பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் தான், அவற்றின் பொருட்களை போலியாக தயாரிக்கும் நிறுவனங்கள் மீது, சீனாவில் வழக்கு தொடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|