பதிவு செய்த நாள்
29 ஜூலை2016
04:06
புதுடில்லி : ‘இந்தியாவில், ‘டிஜிட்டல்’ எனப்படும், மின்னணு தொழில்நுட்பமும், அது சார்ந்த வர்த்தகமும் வேகமாக பரவி வருவதால், அடுத்த, 10 ஆண்டுகளில், மின்னணு வணிகத் துறையில், 1.20 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்’ என, எச்.எஸ்.பி.சி., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்: இந்தியாவிற்கு, அடுத்த, 10 ஆண்டுகளில், எட்டு கோடி புதிய வேலைவாய்ப்புகள் தேவைப்படும். அதில், மின்னணு வணிகம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். சேவைகள் துறையில், குறிப்பிடத்தக்க அளவிற்கு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தளமாக, மின்னணு வணிகம் உருவெடுத்துள்ளது. இத்துறையில், தற்போது, 10 லட்சத்திற்கும் குறைவான இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். இது, வரும் ஆண்டுகளில் மிக வேகமாக அதிகரிக்கும்.
எழுச்சி :இந்தியாவில், இளம் வயதுடையோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்கள், ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துவதும், ‘ஆன்லைன்’ மூலம் பொருட்கள் வாங்கி, அதே முறையில் பணம் செலுத்துவதும் அதிகரித்து வருகிறது.இத்தகைய, ‘டிஜிட்டல் பேமன்ட்’ புரட்சி, ஒட்டுமொத்த மின்னணு வணிகத்தின் மிக விரைவான எழுச்சிக்கு வித்திடும். இதன் காரணமாக, வரும் ஆண்டுகளில், மொத்தம், இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும். அதில், 70 சதவீதம், சரக்கு போக்குவரத்து மற்றும் சப்ளை பிரிவிலும், 30 சதவீதம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகப் பிரிவிலும் அடங்கும்.
பாரம்பரிய வணிகம் தவிர்த்து, நிகர அடிப்படையில், மின்னணு வணிகத் துறையில், 1.20 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். சீனாவில், விவசாயிகள், ‘தாபோ கிராமங்கள்’ எனப்படும், டிஜிட்டல் கடைகளை நிறுவி, தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்யும் திட்டம் அறிமுகமானதை அடுத்து, மின் வணிகம், கிராமப்புறங்களிலும் வேகமாக பரவியது. அதுபோன்ற புரட்சி, இந்தியாவிலும் உருவாகும். அடுத்த, 10 ஆண்டுகளில், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய வணிகர்கள் மூலம், ஏராளமானோருக்கு வேலை கிடைக்கும்.
அதிக அளவிலான தொழிலாளர்கள் மூலம், மிகக் குறைவான உற்பத்தியை மேற்கொள்ளும் துறைகள் தான், இந்தியாவில் பிரதானமாக உள்ளன. உதாரணமாக, வேலைவாய்ப்பில், 50 சதவீத பங்களிப்பை வழங்கி வரும் வேளாண் துறையின் உற்பத்தி மிகக் குறைவாகவே உள்ளது. அதேசமயம், நிதிச் சேவைகள் உள்ளிட்ட பல துறைகள், குறைந்த வேலைவாய்ப்பில், மிக அதிகமான உற்பத்தியை வழங்கக் கூடியவையாக உள்ளன.
ஆற்றலும், திறனும் :இந்த இடைவெளி காரணமாக, இந்தியாவின் ஒட்டுமொத்த தொழிலாளர்கள் அடிப்படையிலான உற்பத்தி விகிதம், மிகக் குறைவாக உள்ளது. இது, மின்னணு வணிகத்தின் வளர்ச்சியால், குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மின்னணு வணிகத்தில் உருவாகும் வேலைவாய்ப்புகள், அதிக அளவில் உற்பத்தியை பெருக்கக் கூடியவையாக இருக்கும். இதற்கு, இந்தியர்களிடம் உள்ள ஆற்றலும், தொழில்முனையும் திறனும் துணை புரியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|