பதிவு செய்த நாள்
25 ஆக2016
00:24
மும்பை : ‘‘நாட்டில் போலி மருந்துகளின் புழக்கத்தை கட்டுப்படுத்த, கூடுதலாக மருந்து ஆய்வாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,’’ என, மத்திய மருந்துகள் துறை இணை செயலர் சுதான்ஷ் பந்த் தெரிவித்துள்ளார்.
அவர், டில்லியில் நடைபெற்ற, இந்திய – அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் மேலும் பேசியதாவது: மத்திய, மாநில அரசுகளின் மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புகள், நாடு முழுவதும் உள்ள, 10 ஆயிரத்திற்கும் அதிகமான மருந்து தயாரிப்பு தொழிற்சாலைகளின் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றன. மருந்துகளின் தரம் குறித்து, தொழிற்சாலைகளில், ஆய்வாளர்கள் சோதனை மேற்கொள்கின்றனர். அதுபோல, மருந்து கடைகளில் விற்கப்படும் மருந்துகளின் தரம் குறித்தும், சோதனை நடத்தப்படுகிறது. இதன் காரணமாக, நாட்டில், போலி மருந்துகளின் புழக்கம், 2 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
சமரசம் இல்லை :இருந்தபோதிலும், மருந்து துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப, மருந்துகளின் தரம் மற்றும் போலி மருந்துகளின் கண்காணிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. நாட்டில், 6 லட்சத்திற்கும் அதிகமான மருந்து கடைகள் உள்ளன. ஆனால், அவற்றுக்கான ஆய்வதிகாரிகளின் எண்ணிக்கை, 500 – 1,000 கடைகளுக்கு ஒருவர் வீதம் என்ற அளவில் தான் உள்ளது. ஆகவே, ஆய்வு அதிகாரிகளின் எண்ணிக்கையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தரமற்ற மருந்துகள் தயாரிப்பும், போலி மருந்துகள் விற்பனையும், கட்டுக்குள் வரும்.
இந்திய மருந்து தயாரிப்பு தொழிற்சாலைகளில், அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பும் ஆய்வு செய்து, மருந்துகளின் தரத்தை பரிசோதிக்கிறது. இதற்கும், மத்திய, மாநில அமைப்புகளின் மருந்து ஆய்வுகளுக்கும் தொடர்பு இல்லை. அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கழகம், கடந்த நான்கு ஆண்டுகளில், இந்திய மருந்துகளின் தரம் குறித்து, 26 எச்சரிக்கை அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அவை ஒரு பொருட்டல்ல என்ற போதிலும், மருந்துகளின் தரத்தில் எவ்வித சமரசத்திற்கும், அனுமதி கிடையாது என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இந்திய மருந்து நிறுவனங்கள் மீதான, அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் நடவடிக்கை குறித்து, அந்நாட்டின் சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
கட்டுப்பாடுகள் :மத்திய அரசு, இந்தியாவில் சுலபமாக தொழில் துவங்குவதற்கு வசதியாக, பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. இது, மருந்து துறையின் வேகமான வளர்ச்சிக்கு வழி கோலியுள்ளது. கடந்த, 4 – 5 ஆண்டுகளில், இந்திய மருந்து துறையில், முதலீடுகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா, 460 கோடி டாலர் மதிப்பிற்கு, மருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|