பதிவு செய்த நாள்
28 ஆக2016
01:56
மும்பை:‘கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியிடப்பட்ட தங்க சேமிப்பு பத்திரங்கள், நாளை இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்’ என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில், ‘தங்க சேமிப்பு பத்திரங்கள்’ வெளியிடப்படும்’ என, 2015, அக்., 30ல் அறிவித்தது.அதன்படி, முதற்கட்டமாக, அதே ஆண்டு, நவ., 5ல், தங்க சேமிப்பு பத்திரங்கள் வெளியிடப்பட்டன.
அதன்பின், அவை, இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு, அவற்றின் மீதான வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘இந்தாண்டு, பிப்ரவரி 8 மற்றும் மார்ச் 29ல் வெளியிடப்பட்ட தங்க சேமிப்பு பத்திரங்கள், வரும், 29ம் தேதி, இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்’ என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தாண்டு, ஜூலை, 18ம் தேதி, நான்காம் கட்டமாக, தங்க சேமிப்பு பத்திரங்கள் வெளியிடப்பட்டன. இவை, எப்போது பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என்ற விபரம் பின் அறிவிக்கப்படும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம், ஐந்தாம் கட்டமாக, தங்க சேமிப்பு பத்திரங்களை வெளியிட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தங்க சேமிப்பு பத்திரங்களில் செய்யும் முதலீட்டிற்கு, ஆண்டு வட்டி, 2.75 சதவீதம் வழங்கப்படுகிறது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வட்டித் தொகை, வழங்கப்படும். ஓராண்டில், ஒருவர் குறைந்தபட்சம், 2 கிராம் முதல், 500 கிராம் வரையிலான, தங்க சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|