பதிவு செய்த நாள்
29 ஆக2016
06:55
புதுடில்லி : ‘சரக்கு மற்றும் சேவை வரி அமலாகும்போது, துவக்க காலத்தில் ஏற்படும் சில தவறுகளுக்கு அபராதம் விதிக்கக் கூடாது’ என, இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பான ‘அசோசெம்’ மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் விபரம்: அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வரும் போது, கலால் வரி, சேவை வரி, உள்ளூர் வரி என, பலவித வரிகள் முடிவிற்கு வரும். அதேசமயம், இந்த வரி நடைமுறைகளில் இருந்து, சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்திற்கு மாறுவதற்கு, தொழில் நிறுவனங்கள், அவற்றின் கணக்கு தணிக்கை முறைகளிலும், கணினி செயல்பாடுகளிலும் மாற்றங்கள் செய்வது அவசியமாகும். ஆவணங்களில் இருந்து, ‘டிஜிட்டல்’ முறைக்கு சரக்கு மற்றும் சேவை வரி சார்ந்த அனைத்து நடைமுறைகளும் மாற்றப்பட வேண்டும். இதற்கு சில காலம் ஆகும் என்பதால், நிறுவனங்களுக்கு போதுமான அவகாசம் அளிக்க வேண்டும்.
வரி விதிப்பின் துவக்க காலத்தில், தொழில் நிறுவனங்கள், சரக்கு மற்றும் சேவை வரியை கையாளும்போது, சில தவறுகள் நேர வாய்ப்புள்ளது. எனவே, நிறுவனங்கள், உள்நோக்கமுடன் செய்யாத எத்தகைய தவறுகளுக்கும், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ், அபராதம் விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய வரி சீர்திருத்த திட்டமாகும். அதில் உள்ள பல்வேறு விதிமுறைகள் குறித்து இன்னும் தெளிவு படுத்த வேண்டும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு அமலுக்கு வந்தாலும், அவற்றை நிர்வகிக்கும் அதிகாரம், மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே, கருத்து வேறுபாடு எழுவதற்கு வழி வகுக்கும். அதனால், மத்திய, மாநில அரசுகள் இணைந்து, ஒரே அமைப்பின் கீழ், வரி விதிப்பு முறையை நிர்வகிக்கலாம்.
மேலும், சரக்கு மற்றும் சேவை வரி வரைவு அறிக்கையில், வரி விதிப்பு அமலுக்கு வந்த 3 – 5 ஆண்டுகளுக்குள், பல கட்ட தணிக்கைகளும், ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. வரிவிதிப்பு நடைமுறை முழுவதும் கணினி மயமாக்கப்பட்டு ஒவ்வொரு வர்த்தக பரிவர்த்தனையும் பதிவு செய்யப்பட வேண்டும்; அக்கணக்கு விபரங்களை மாதந்தோறும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், வரைவறிக்கை கூறுகிறது. இது, நிர்வாக நடைமுறைகளை மேலும் கடினமாக்கும். சுலபமாக தொழில் செய்வதற்காக கொண்டு வருப்படும், இந்த வரி விதிப்பின் நோக்கத்திற்கு எதிராக அமைந்து விடும். இதுபோன்ற பல கருத்துக்கள், நாளை நடைபெறும், சரக்கு மற்றும் சேவை வரிக்கான, மாநில நிதியமைச்சர்களின் அதிகாரமிக்க குழுவின் கூட்டத்தில், தொழில்துறையினர் சார்பாக எடுத்துரைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|