பதிவு செய்த நாள்
05 செப்2016
05:04
சொந்த வீடு வாங்கும் விருப்பம் கொண்டவர்கள் அதற்காக திட்டமிடும் போது, தற்போது சாத்தியமாகும் அளவிலான சிறிய வீட்டை வாங்குவதா அல்லது மேலும் நன்றாக திட்டமிட்டு காத்திருந்து, வசதியான இடத்தில் பெரிய வீடாக வாங்குவதா? எனும் கேள்வியால் உண்டாகும் குழப்பத்தை எதிர்கொள்ள வேண்டி வரலாம். பொதுவாக, ஒருவரின் சம்பளத்தின் அடிப்படையில் தான் வீட்டுக் கடன் கிடைக்கும். விரும்பிய பட்ஜெட்டில் வீடு வாங்குவதற்கான சம்பளம் இல்லை என்றால், கிடைக்கும் வீட்டுக் கடனுக்கு ஏற்ற வீட்டையே தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.
இதனால், அளவில் சிறிய வீட்டை தான் வாங்க முடியும் என்பதோடு, அந்த வீடும் நகருக்கு வெளியே தொலைவில் அமைவதற்கான வாய்ப்பும் உள்ளது. இது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தலாம், என்றாலும், வேறு வழியில்லாமல் நடுத்தர மக்கள் பலரும், விரலுக்கேற்ற வீக்கமே சரி என்று, தங்கள் கடன் தகுதிக்கு சாத்தியமான வீட்டை வாங்கிக் கொண்டு விடுகின்றனர்.இதற்கு மாறாக, இப்போதைய நிலையில், பெரிய வீடு வாங்குவது சாத்தியமில்லை என்பதை புரிந்து கொண்டு, வீடு வாங்கும் முடிவை 3 முதல் 5 ஆண்டுகள் தள்ளிப்போடலாம். இடைப்பட்ட காலத்தில் திட்டமிட்டு சேமித்து கணிசமான தொகையையும் கையில் வைத்திருக்கலாம். மேலும் சம்பள உயர்வு மூலம் கடன் தகுதியும் அதிகரித்திருக்கும் என்பதால் எதிர்காலத்தில் விரும்பியது போல பெரிய வீட்டை, விரும்பிய பகுதியில் வாங்குவது சாத்தியமாகலாம்.இப்போது ஒற்றை படுக்கையறை வீடு தான் வாங்க முடியும் என்றால், சில ஆண்டுகள் காத்திருந்து திட்டமிட்டால் இரட்டை படுக்கையறை வீடு வாங்கலாம். எனவே, தற்போது சாத்தியமாகும் வீட்டை வாங்குவதா அல்லது எதிர்காலத்தில் வாங்க கூடிய வசதியான வீட்டிற்கு காத்திருப்பதா எனும் கேள்வி எழலாம். வாங்கும் வீட்டை எல்லா வசதிகளுடனும் வாங்க வேண்டும் என விரும்புவது சரியானது தான். அதற்காக காத்திருந்து திட்டமிடுவதிலும் தவறில்லை தான். ஆனால், இதில் பாதகமான அம்சங்கள் இருப்பதையும் கவனிக்க வேண்டும். வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமைய வாய்ப்பில்லை என்பதால், எதிர்காலத்தில் சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி இருக்கும் என்பது நிச்சயமில்லை. 2008 பொருளாதார தேக்க நிலை அல்லது பிரெக்ஸிட் பிரச்னை போன்றவை பாதிப்பை உண்டாக்கினால் சிக்கல்.
மேலும், சில ஆண்டுகளில் கடன் தகுதி உயரும் என்றாலும், அதற்கேற்ப வீடுகளின் விலையும் அதிகரித்திருக்கும். இந்த அம்சங்கள் வருங்கால வீடு திட்டமிடலை கேள்விக்குள்ளாக்கலாம். இதை தவிர்க்க, தற்போது சாத்தியமாகும் வீட்டை வாங்குவதே புத்திசாலித்தனம் என்று வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர். அதற்காக எலி வலை வீடு தான் நமக்கு என இருந்துவிட வேண்டியதில்லை. இப்போது வீட்டை வாங்கிவிட்டு, தொடர்ந்து தீவிரமாக சேமித்தும் வர வேண்டும். சில ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு போன்றவை கைகொடுக்கும் போது, முதல் வீட்டை விற்று விட்டு பெரிய வீடாக வாங்கி கொள்ளலாம். இதற்குள் முதல் வீட்டின் மதிப்பும் கணிசமாக உயர்ந்திருக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|