பதிவு செய்த நாள்
25 செப்2016
00:51
புதுடில்லி:‘இந்தியாவில், வலைதளம் வாயிலாக, கல்வி பயிற்சி அளிக்கும் சந்தையின் மதிப்பு, இந்தாண்டு இறுதிக்குள், 16,750 கோடி ரூபாய் என்ற அளவிற்கு உயரும்’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.இந்திய மாணவர்கள், பள்ளிப் படிப்புடன், ‘டியூஷன்’ எனப்படும், துணை வகுப்புகளுக்கும் செல்கின்றனர். இதற்காக அவர்கள், கூடுதலாக பணத்தையும், நேரத்தையும் செலவழிக்கின்றனர். இது, பாடங்களை முழுமையாக புரிந்து கொண்டு, தேர்வில் சிறப்பாக மதிப்பெண்கள் பெற உதவுகிறது.
தற்போது, வலைதளம் மூலம் பல நிறுவனங்கள், இது போன்ற துணை வகுப்புகளை நடத்துகின்றன. இதனால், மாணவர்களுக்கு விருப்பமான நேரத்தில், எந்த இடத்தில் இருந்தும், இத்தகைய கல்வி பயிற்சியை மேற்கொள்ளும் வசதி கிடைத்துள்ளது. இந்தியாவில், வலைதளம் வாயிலான கல்வி பயிற்சியை, ஏராளமான நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
‘இந்தாண்டிற்குள், வலைதள கல்வி பயிற்சி சந்தை, 250 கோடி டாலர், அதாவது, 16,750 கோடி ரூபாயாக உயரும்; இது, அடுத்த மூன்றாண்டுகளில், 15 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி காணும்’ என, ‘ரெட்சீர் கன்சல்டிங்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அதன் விபரம்:மாணவர்கள் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில், வடிவமைக்கப்பட்ட பாடத் திட்டங்கள்; ஆசிரியர்கள் போதிக்கும் முறையில் புதுமை; நாட்டின் எந்த மூலையில் இருந்தும் கல்வி கற்கும் வசதி போன்றவற்றால், இந்தியாவில் வலைதள கல்வி பயிற்சி வர்த்தகம், வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.
நாட்டில், 6 – 12ம் வகுப்பு வரை பயிலும், 2 கோடி மாணவர்கள், வலைதளத்தில், துணை கல்வி பயிற்சி பெற ஆர்வமாக உள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இவர்களில் பெரும்பாலோர், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை சேர்ந்தவர்கள். இம்மாணவர்கள், தற்போது பாரம்பரிய முறையில், ஆசிரியர்கள் நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு செல்கின்றனர். இவர்கள், வலைதள கல்வி பயிற்சியை விரும்புவர். இத்தகையோர், சிறிய நகரங்களில் தான், அதிகளவில் உள்ளனர். ஆனால், அந்நகரங்களில் ஆற்றல் குறைவான இணைய இணைப்புகள், வலைதள கல்வி வர்த்தகத்திற்கு தடையாக உள்ளது. அத்துடன், வலைதள கல்வி குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளதும், அக்கல்வி பயிற்சிக்கு, மாணவர்கள் கட்டணம் செலுத்த தயங்குவதும், பாதகமான அம்சங்களாக உள்ளன.
இவற்றுக்கு தீர்வு காணும்பட்சத்தில், வலைதள கல்வி சந்தை சிறப்பாக வளர்ச்சி காணும். இலவச கல்வி பயிற்சியை குறிப்பிட்ட காலத்திற்கு வழங்குவது, குறைவான இணைய வேகத்திலும், பாடங்களை பதிவிறக்கி படிக்கும் வசதி போன்றவற்றை ஏற்படுத்துவதன் மூலம், இத்துறை சார்ந்த நிறுவனங்களின் வர்த்தகம் உயரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|