பதிவு செய்த நாள்
25 செப்2016
23:43
மொபைல் வாலெட்கள், கிரெடிட் கார்டுகள், செயலிகள், யு.பி.ஐ., என பண பரிவர்த்தனைக்கான வசதிகள் அதிகரித்து வரும் நிலையில், உங்களுக்கு பொருத்தமான முறையை தீர்மானிப்பது எப்படி?
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் இணையம் மூலமே பணம் செலுத்துவது, பெறுவது எளிதாகி இருக்கிறது. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் தவிர, நெட் பேங்கிங், மொபைல் வாலெட்கள், வங்கி செயலிகள் போன்றவை மூலமும் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடிகிறது. அண்மையில் அறிமுகம் ஆகியுள்ள வசதியான யு.பி.ஐ., தனிநபர்களுக்கு இடையிலான பணபரிவர்த்தனையில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண பரிவர்த்தனைக்கான வசதிகள் அதிகரிப்பது வாடிக்கையாளர்களுக்கான வாய்ப்புகளை அதிகமாக்கியுள்ளது என்றாலும், எந்த சேவையை பயன்படுத்துவது எனும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சாதகங்கள், பாதகங்கள்!அதோடு மொபைல் வாலெட்கள் தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகைகள் போன்றவற்றை அளித்து கவர முயன்று வருகின்றன. இந்த சூழலில், பயனாளிகள் தங்கள் தேவைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பண பரிவர்த்தனை வசதிகளை தேர்வு செய்வது பொருத்தமாக இருக்கும் என வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.பல்வேறு வகையான பண பரிவர்த்தனை வசதிகள் இருந்தாலும், பயன்படுத்தும் சூழலுக்கு ஏற்ப ஒவ்வொன்றிலும் சாதகமான மற்றும் பாதகமான அம்சங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, மொபைல் போன்கள் மூலம் பணம் செலுத்துவது எளிதாக அமைகிறது.
நெட் பேங்கிங் சேவையை பயன்படுத்தும் போது, இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறையை பயனாளிகள் தாங்களாகவே மேற்கொள்ள வேண்டியிருப்பதால், மொபைல் மூலம் பண செலுத்துவது இதைவிட எளிதாக அமைகிறது. இப்போது அறிமுகம் ஆகியுள்ள யு.பி.ஐ., வசதியும் மிகவும் எளிமையாக பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அதே போல, மொபைல் வாலெட்கள், டெபிட் கார்டுகளுக்கு மாற்றாக அமைகின்றன. பயணத்தின் போது பயன்படுத்த மற்றும் பரிசு வழங்க இவை அதிகம் நாடப்படுகின்றன. ஆனால், மொபைல் வாலெட்களுக்கு வரம்பு உண்டு என்பதால் இவற்றில் அடிக்கடி பணத்தை நிரப்பிக்கொண்டிருக்க வேண்டும். இது பல நேரங்களில் சிக்கலை ஏற்படுத்தலாம். ஆனால், வங்கிகளின் பிரத்யேக செயலிகளை பயன்படுத்தும் போது இத்தகைய பிரச்னைகள் இல்லை.
எந்த சேவை எப்போது?பொதுவாக, பலரும் தேவைக்கேற்ப பண பரிவர்த்தனை முறைகளை தேர்வு செய்வது வழக்கமாக உள்ளது. மொபைல், டி.டி.எச்., ரீசார்ஜ் போன்ற குறைந்த தொகை பயன்பாட்டிற்கு வாலெட்கள் அதிகம் நாடப்படுகின்றன. பெரும்பாலும், 100 முதல் 250 ரூபாய் வரையான பரிவர்த்தனைகள் இதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. அதே போல, பணம் அனுப்புவதற்கு, வங்கி செயலிகள் ஏற்றதாக அமைகின்றன. ஐ.பி.எம்.எஸ்., மேடை சார்ந்து இயக்கும் இவை உடனடியாக பணம் அனுப்ப, பெற உதவுகின்றன. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட யு.பி.ஐ., வசதி, இ–மெயில் போன்ற தனித்தன்மை மிக்க விர்ச்சுவல் அடையாளம் மூலம் தனிநபர்கள் பண பரிவர்த்தனை செய்ய வழி செய்கிறது. தற்போது, 21 வங்கிகள் இந்த வசதியை வழங்குகின்றன. தற்போதைய நிலையில், பண பரிவர்த்தனைக்கு, வங்கி செயலிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பொருட்களை வாங்குவது, பணம் செலுத்துதல் போன்றவற்றுக்கு நெட் பேங்கிங் வசதி, மொபைல் வாலெட்களும் அதிகம் பயன்படுகின்றன.
உங்கள் தேர்வு என்ன?பயனாளிகள், தங்கள் தேவைக்கு ஏற்ற வசதியை தேர்வு செய்ய, சேவைகளின் முக்கிய அம்சங்களை பரிசீலிப்பதோடு, அவற்றுக்கான கட்டணத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதோடு, தள்ளுபடி சலுகைகள் போன்றவற்றையும் மனதில் கொள்ள வேண்டும். யு.பி.ஐ., வசதி பயனாளிகளுக்கு இலவசமாக அமைகிறது, என்றாலும் வங்கிகளுக்கான செலவு ஐ.எம்.பி.எஸ்., பரிவர்த்தனை போலவே அமைகிறது.வழக்கமாக வங்கிகள் பண பரிவர்த்தனை செலவை மொபைல் செயலிகள் மற்றும் நெட் பேங்கிங் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கின்றன. பாதுகாப்பு அம்சத்தை பொருத்தவரை, ரிசர்வ் வங்கி எல்லா வகையான பண பரிவர்த்தனைக்கும் இரண்டு அடுக்கு பாதுகாப்பை வலியுறுத்துகிறது. வங்கிகள், பரிவர்த்தனை வரம்பு தேர்வு போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை அளிக்கின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|