பதிவு செய்த நாள்
22 அக்2016
03:42
புதுடில்லி;வலைதள சந்தை நிறுவனங்கள்,அதிரடி விலை குறைப்பில் பொருட்களை விற்பதால், கடைகளில் விற்பனை பாதிக்கப்படுவதாக,சில்லரை வணிகர்கள், மத்தியஅரசிடம் புகார் தெரிவித்து உள்ளனர்.
பண்டிகை காலத்தை முன் னிட்டு, ‘அமேசான், ஸ்நாப்டீல், பிளிப்கார்ட்’ உள்ளிட்ட வலைதள சந்தை நிறுவனங்கள், குறைந்த விலையில், ‘டிவி, ரெப்ரிஜிரேட்டர், வாஷிங் மிஷின், மொபைல் போன்’ உட்பட ஏராளமான பொருட்களை விற்பனை செய்கின்றன. இதற்காக, ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படுகிறது. தள்ளுபடி சலுகைகள் காரணமாக, வலைதளங்களில் பொருட்கள் வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அலைச்சல் இன்றி, வீடு தேடி பொருள் வந்து விடுவதால், இளைய சமூகத்தினர் மத்தியில், வலைதள நிறுவனங்களின் பொருட்களுக்கு மவுசு பெருகி உள்ளது.
இதனால், கடைகளில் பொருட்களை விற்பனை செய்யும் சில்லரை வர்த்தகர்கள், வலைதள சந்தை நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர்.‘வலைதள சந்தை நிறுவனங்கள், பொருட்களை விற்பனை செய்வோருக்கும், வாங்கும் நுகர்வோருக்கும் இடையே, பாலமாக மட்டுமே செயல்பட வேண்டும்; நேரடியாகவோ, மறைமுகமாகவோ, பொருட்கள், சேவைகள் ஆகியவற்றுக்கான விலையில் தலையிடக் கூடாது’ என, தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் சட்ட விதிமுறை கூறுகிறது.
இதை, வலைதள சந்தை நிறுவனங்கள் மீறி நடந்து கொள்வதாக, இந்திய சில்லரை வர்த்தகர்கள் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.இது தொடர்பாக, இக்கூட்டமைப்பைச் சேர்ந்த, பியூச்சர் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி, கிஷோர் பியானி தலைமையிலான வணிகர்கள் குழு, மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லியை, டில்லியில் சந்தித்து பேசியது. அப்போது, வலைதள சந்தை நிறுவனங்களின் முறையற்ற செயல்பாடுகள் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களிடம், கிஷோர் பியானி கூறியதாவது:வலைதள சந்தை நிறுவனங்கள், அதிரடியாக தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்பதால், சில்லரை வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, நிதியமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தோம்.
பொருட்களின் விலை, கடையிலும், வலைதளத்திலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அது தொடர்பாக உறுதியான, தெளிவான கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என, தெரிவித்துள்ளோம்.சில்லரை விற்பனையில், அன்னிய நேரடி முதலீடுகளால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் விவரித்தோம். எங்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக, அமைச்சர் தெரிவித்து உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|