பதிவு செய்த நாள்
23 அக்2016
06:05
புதுடில்லி;‘வரும் மாதங்களில், நாட்டின் தயாரிப்புத் துறை வளர்ச்சி, ஏற்ற, இறக்கமின்றி சமமாக இருக்கும்’ என, எஸ்.பி.ஐ., ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்:செப்டம்பருடன் ஒப்பிடும் போது, நடப்பு அக்டோபரில், தயாரிப்புத் துறையின் ஆண்டு வளர்ச்சி குறியீடான, ‘எஸ்.பி.ஐ., காம்போசைட் இன்டெக்ஸ்’ 50.2 புள்ளிகள் என்றளவில், மாற்றமின்றி காணப்படுகிறது.
அதே சமயம், தயாரிப்புத் துறையின் மாதாந்திர வளர்ச்சி குறியிடான, எஸ்.பி.ஐ., காம்போசைட் இன்டெக்ஸ், நடப்பு அக்டோபரில், 52.1 புள்ளிகளாக குறைந்துள்ளது; இது, செப்டம்பரில், 52.6 புள்ளிகளாக அதிகரித்து காணப்பட்டது.
மாதாந்திர அடிப்படையில், தயாரிப்புத் துறையின் வளர்ச்சி விகிதம் குறைந்து வரும் பட்சத்தில், அது, ஆண்டு வளர்ச்சிக்கான குறியீட்டு புள்ளிகளின் சரிவிற்கு வழிவகுக்கும்.அதனடிப்படையில், வரும் மாதங்களில், நாட்டின் தயாரிப்புத் துறை வளர்ச்சி, ஏற்ற, இறக்கமின்றி, நிலையாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, தொடர்ந்து பின்னடைவை கண்டு வருகிறது. அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வரும் மாதங்களில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
கடந்த செப்., 30 வரையிலான, இரு வாரங்களில், தொழில் துறையினரின் கடன் வளர்ச்சி, ஆண்டுக்கணக்கின் அடிப்படையில், 10.4 சதவீதம் என்றளவில் குறைந்து காணப்படுகிறது; இது, வரும் மாதங்களில், நிலையான அளவில் அதிகரித்து வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு, அக்., முதல், அடுத்த, 3 – 4 மாதங்களில், நாட்டின் பணவீக்கம், 4 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும்; இது, வரும் நவம்பரில், 3.5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.ரிசர்வ் வங்கி, 2017 ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், நாட்டின் பணவீக்கம் இலக்கை, 5 சதவீதமாக நிர்ணயித்து உள்ளது.
ஆனால், இந்த இலக்கை விட, பணவீக்கம் குறைவாக இருக்கும் என, கணிக்கப்பட்டு உள்ளது.அதனால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, இந்தாண்டு இறுதிக்குள், மீண்டும் குறைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|