பதிவு செய்த நாள்
27 அக்2016
07:38
புதுடில்லி : மக்களின் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பான, தரமான, உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், மத்திய அரசு, ஊட்டச்சத்து உணவுகளுக்கு, புதிய தர நிர்ணய விதிமுறைகளை, விரைவில் அமல்படுத்த உள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம், கடந்த ஆண்டு, ஊட்டச்சத்து உணவுகளுக்கான தர நிர்ணய பாதுகாப்பு விதிமுறைகளை உருவாக்கியது. ‘‘இந்த தர நிர்ணய வரைவறிக்கை, மத்திய அரசின் ஒப்புதலுடன், விரைவில் வெளியிடப்படும்,’’ என, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, பவன் குமார் தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது: இந்தியாவில், மக்களிடம் நேரடியாக பொருட்களை விற்பனை செய்யும், 60 சதவீத நிறுவனங்கள், ஊட்டச்சத்து உணவு வகைகளின் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நேரடி விற்பனை நிறுவனங்கள், 40 லட்சம் வினியோகஸ்தர்கள் மூலம், ஊட்டச்சத்து உணவுகளை, மக்களிடம் நேரடியாக விற்கின்றன. ஆகவே, இந்நிறுவனங்கள், பாதுகாப்பான ஊட்டச்சத்து உணவுகள் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேசமயம், இந்நிறுவனங்கள் விற்பனை செய்யும் ஊட்டச்சத்து உணவுகளின் தரம், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நிர்ணயித்துள்ள, அளவுகோல்படி இருக்க வேண்டும்.
இந்தியாவைச் சேர்ந்த, 130 கோடி மக்களுக்கு பாதுகாப்பான, ஊட்டச்சத்து உணவுகள் கிடைப்பதை உறுதி செய்யும் பொறுப்பு, எங்களுக்கு உள்ளது. அதனடிப்படையில், ஊட்டச்சத்து உணவுகளுக்கான தர நிர்ணய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
நேரடி விற்பனை நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர்,ஜிதேந்திர ஜகோடா கூறியதாவது: இந்தியாவில், நேரடி விற்பனை துறைக்கு, பிரகாசமான வளர்ச்சி வாய்ப்பு உள்ளது. இத்துறையில், பெண்கள் பெரும்பான்மையாக உள்ளனர்; அதிகளவில், ஆண்களுக்கும் வர்த்தக வாய்ப்புகளை வழங்கும் இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். நேரடி விற்பனை துறையின் சந்தை மதிப்பு, 2019 – 20ம் நிதியாண்டில், 15 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும்; 90 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு, வர்த்தக வாய்ப்புகளை வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பக்கவிளைவுகள் உடல் பருமனை குறைப்பதாக கூறும், பல்வேறு ஊட்டச்சத்து உணவுகள், பயங்கரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தால், ஊட்டச்சத்து உணவு கள் என்ற பெயரில், உடலுக்கு ஊறு விளைவிக்கும் உணவுப் பொருட்களின் விற்பனை முடிவுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|