பதிவு செய்த நாள்
10 நவ2016
14:36
மத்திய அரசு, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால், ரியல் எஸ்டேட் வர்த்தகம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பத்திரப்பதிவும் கடும் வீழ்ச்சி அடையும்.
60 சதவீதம் : நாடு முழுவதும் மக்கள் மத்தி யில் புதிய வீடு, மனைகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால், ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறைகள் தவிர்க்க முடியாதவையாக மாறியுள்ளன. ரியல் எஸ்டேட் துறையில், நிலம் வாங்குவது, விற்பதில் பெருமளவு கறுப்பு பணம் ரொக்கமாக பரிமாறப்படுவதாக கூறப்படுகிறது. இத்துறையில், வெளிப்படையான பரிவர்த்தனையை உறுதி செய்ய, மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இன்றைய சூழலில், பெரும்பாலான சொத்து பரிமாற்றத்தில், மொத்த தொகையில், 60 சதவீதம் கணக்கில் வராத பணமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு, ரியல் எஸ்டேட் துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில், வெளிப்படை தன்மையை ஏற்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வழிகாட்டி மதிப்பு குளறுபடி, அங்கீகாரமில்லாத மனை விற்பனை தடை போன்ற பிரச்னைகளை சந்தித்து வரும், ரியல் எஸ்டேட் துறைக்கு, இது மேலும் ஒரு அடியாக அமைந்துள்ளது.
வரவேற்பு : இது குறித்து அக் ஷயா ஹோம்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, டி.சிட்டிபாபு கூறியதாவது: நாட்டில் கறுப்பு பணத்தையும், கள்ள நோட்டையும் ஒழிப்பதில் மத்திய அரசு புரட்சிகரமான ஒரு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளது. இதன் செயலாக்கம், வீடு, மனை விற்பனையில் விலை நிர்ணயிப்பது, வட்டி சதவீத கணக்கீடு ஆகியவற்றில், வெளிப்படைதன்மையை உறுதி செய்யும். இந்த பின்னணியில், ரியல் எஸ்டேட் சட்டம் அமலுக்கு வரும்போது, இத்துறையில் பல்வேறு நிலைகளில் வெளிப்படை தன்மைக்கு வழி வகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
பத்திரப்பதிவு முடக்கம் : இது குறித்து பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பத்திரப்பதிவுத் துறையில் பதிவு கட்டணம், முத்திரைத் தீர்வை வேறுபாட்டு தொகையில், 1,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகைகளை வங்கி வரைவோலையாக மட்டுமே செலுத்த வேண்டும். இத்தொகைக்கு, 500 ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ள லாம் என சார்-பதிவாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஆனாலும், சொத்து பரிமாற்றத்தில் ஈடுபடுவோர் இடையிலான பண பரிவர்த்தனை, பத்திரப்பதிவும், 500, 1,000 ரூபாய் நோட்டு பிரச்னையால் முடங்கியுள்ளது. தினமும், 15 பத்திரங்கள் வரும் அலுவலகத்தில், ஐந்து பத்திரங்கள் மட்டுமே வருகின்றன. இது தொடர்ந்தால், பதிவுத்துறை பணிகள் முற்றிலுமாக முடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|