பதிவு செய்த நாள்
04 டிச2016
05:14
புதுடில்லி:‘சர்வதேச சந்தையில், சிறப்பு வகை நிலக்கரியின் விலை உயர்ந்துள்ளதாலும், மத்திய அரசின், பண மதிப்பு நீக்க நடவடிக்கையாலும், உள்நாட்டு உருக்கு துறை பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விபரம்:நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், உருக்கு தேவைப்பாடு குறைந்து, ஒருவித தேக்க நிலை காணப்பட்டது.
கடந்த நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது, உருக்கு பயன்பாடு, 0.4சதவீத அளவிற்கே வளர்ச்சி கண்டிருந்தது. ஆனால், ஜூலை – செப்., வரையிலான இரண்டாவது காலாண்டில், உருக்கு பயன்பாடு, 6.8 சதவீதம் அதிகரித்தது. இந்நிலையில், சர்வதேச சந்தையில், கொதிகலன்களில் பயன்படுத்தும் சிறப்பு வகை நிலக்கரியின் விலை உயர்ந்துள்ளது. இது, அவ்வகை நிலக்கரியை சார்ந்துள்ள உருக்கு நிறுவனங்களை பாதித்துள்ளது. சிறப்பு வகை நிலக்கரி விலை உயர்வால், உருக்கு நிறுவனங்களின் மூலப்பொருட்கள் செலவினம் அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபரில், ஒரு டன், சிறப்பு வகை நிலக்கரியின் விலை, 213 டாலராக இருந்தது. இது, தற்போது, 309 டாலராக உயர்ந்துள்ளது.
இதனால், நடப்பு நிதியாண்டில், ஜன., – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், உருக்கு நிறுவனங்களின் லாப வரம்பு குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில், மத்தியஅரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை, உருக்கு துறைக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், கறுப்புப் பணம் அதிக மாக புழங்கும், ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இதன் தாக்கத்தால், கட்டுமான பணிகளுக்கு அவசியமான, உருக்கு கம்பிகள், உருக்குஉருளைகள் உள்ளிட்டவற்றுக்கான தேவை குறையும்.
இது, சிறிய மற்றும் நடுத்தர உருக்கு நிறுவனங்களை பாதிக்கும்; அவற்றின், உருக்கு உற்பத்தி குறையும். அதே சமயம், உருக்கு தகடுகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பாதிப்பு குறைவாக இருக்கும்.ஊரகப் பகுதிகளில், கூரைகள் அமைப்பதற்கான உருக்கு தகடுகளின் பயன்பாடு அதிகம் உள்ளது. அங்கு, ரொக்கப் பயன்பாடு அதிகம் உள்ளதால், உருக்கு தகடு விற்பனை சற்று குறையும். இருந்த போதிலும், உருக்கு தகடு தயாரிப்பு நிறுவனங்களுக்கு, பெரியளவில் பாதிப்பு இருக்காது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை, வாகன துறையில், குறிப்பாக, இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனையில், லேசான பாதிப்பை ஏற்படுத்தும். இதன் தாக்கம், வாகனங்கள் தயாரிப்பில் முக்கிய அங்கம் வகிக்கும், உருக்கு பொருட்கள்விற்பனையில் எதிரொலிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|