பதிவு செய்த நாள்
05 டிச2016
01:18
பணத்தின் வடிவம் மாறிக் கொண்டே வரும் நிலையில், இணைய தொழில்நுட்பம் சாத்தியமாக்கி இருக்கும், சைபர் பணம் எனும் புதிய வடிவம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும், பணத்தை புதிய நோக்கில் புரிந்து கொள்வதை அவசியமாக்குகிறது என்றும், ‘சைபர் கேஷ்’ புத்தகத்தில், ராபர்ட் கட்மன் விவரிக்கிறார்.
பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன், அறிமுகமானதில் இருந்து பணம், அதன் வடிவம், செயல்பாட்டில் மாறிக் கொண்டே இருக்கிறது. இந்த மாற்றங்கள் பொருளாதார செயல்பாட்டிலும் பிரதிபலித்து வருகிறது. பொருளாதார செயல்பாடுகளில், பணம் முக்கிய பங்கு வகிப்பதால், பணம் சார்ந்த செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றம் பரிவர்த்தனை, உற்பத்தி மற்றும் கடனிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
இன்று, நாம் காகித பண வடிவில் இருந்து மின்னணு பணத்திற்கு மாறிக் கொண்டிருக்கும் போது, இதே நிலை இருக்கிறது. ரூபாய் நோட்டுகள் மற்றும் காசோலைக்கு மாற்றாக பிளாஸ்டிக் கார்டுகள், மின்னணு பணப் பரிமாற்றம், தானியங்கி பண கிளீயரிங் போன்றவை காரணமாக, உலகம் பணத்தின் தானியங்கிமயமாக்கலில் அடுத்த கட்டத்திற்கு தயாராகி கொண்டிருக்கிறது.
இணையம் மூலமான மின்வணிகம், பலவகையான இணையம் மூலம் பணம் செலுத்தும் செயல்முறைகளுக்கு வித்திட உள்ளது. இந்த சைபர் பணம், ஒரு சந்தையாக, இணையத்தின் பயன்பாட்டை பல மடங்கு அதிகரிக்க உள்ளது. உற்பத்தி மற்றும் நிதி பரிவர்த்தனையிலும், இணையத்தின் பயன்பாட்டை அதிகரிக்க உள்ளது. டிஜிட்டல் பண வடிவங்களால், நாம் புதிய தொழில்புரட்சி யுகத்தில் நுழைந்திருக்கிறோம்.
இதை புரிந்து கொள்ள, முதலில் நாம், மின்னணு பணம் எனும் நிகழ்வை புரிந்து கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் பயன்பாடு, ஏற்கனவே வங்கிகள் பணம், பணப் பரிவர்த்தனையை கையாளும் விதத்தை மாற்றியுள்ளது.
பணம் சார்ந்த செயல்பாடுகளை, தானியங்கிமயமாக்குவதற்கான களம் தயாராகி உள்ள நிலையில், இப்போது, மின்னணு பண வடிவத்தின் உச்சமாக சைபர் பணத்தை கையாள, இணையத்தின் எழுச்சியை வங்கிகள் பயன்படுத்தி வருகின்றன. சைபர் பணம் மற்ற பண வடிவங்களில் இருந்து மாறுபட்டிருக்கிறது.
பணத்தில் ஏற்பட்டுள்ள பெரும் தாக்கத்தை உண்டாக்கக் கூடிய மாற்றத்தை புரிந்து கொள்ள, பொருளாதார நடவடிக்கைகள் அமைப்பின் மையமாக விளங்கும் சமூக அமைப்பாக, பணத்தை புரிந்து கொள்வதே சரியாக இருக்கும்.
பணம் தொடர்பான புரிதலை தெளிவுபடுத்துவதில், பொருளாதார வல்லுனர்கள் ஓரளவுக்கே உதவுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பணத்தை, பரிவர்த்தனை செயல்பாட்டிற்கான சாதனமாக பார்க்கின்றனர். பொருளாதார மேதை கீன்சிற்கு பின், சிலர் பணத்தை ஒரு வகை நிதி சொத்தாக பார்க்க துவங்கியுள்ளனர்.
இந்த அணுகுமுறைகளில், பணம் பொருளாதாரத்தில் எப்படி ஒருங்கிணைக்கப்படுகிறது என்றோ, அதன் வடிவம் பற்றியோ அதிகம் கவனிக்கப்படுவதில்லை. ஆனால், சைபர் பணத்தின் வருகைக்கு பின், இந்த கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|