பதிவு செய்த நாள்
07 டிச2016
05:18
புதுடில்லி:‘வலைதளம் வாயிலான வர்த்தக பரிவர்த்தனைகளில், இந்தியா, வரும், 2034ல், அமெரிக்காவை விஞ்சி, உலகளவில் இரண்டாவது இடத்தை பிடிக்கும்’ என, ‘வேர்ல்டுபே’ நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்நிறுவனம், இந்தியா, சீனா, ஹாங்காங், தென்கொரியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட, 30 நாடுகளின் மின்னணு சந்தைகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன் விபரம்:இந்தியாவில், இணைய தள இணைப்பு வசதி சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது, 35 கோடி பேர், இணையம் பயன்படுத்துகின்றனர்; இது, 2020ல், 60 கோடியாக அதிகரித்து, வலைதளம் வாயிலான வர்த்தகம் வளர துணை புரியும்.
இளைஞர்கள்
இந்தியாவில், ஸ்மார்ட் போனில், இணையத்தை பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. அதற்கு, இதர நாடுகளை விட, இந்தியாவில் இணைய வசதிக்கான, ‘3ஜி, 4ஜி’ சேவை கட்டணம், மிகக் குறைவாக உள்ளதும் ஒரு காரணம்; இங்கு, ஸ்மார்ட் போனில் இணைய சேவைக்கான கட்டணம், அமெரிக்காவை விட, மூன்று மடங்கும், சீனாவை விட, இரு மடங்கும் குறைவாக உள்ளது. அதனால், குறிப்பாக, இளைஞர்கள், ஸ்மார்ட் போன் மூலம், வலைதளங்களில் மிகச் சுலபமாக பொருட்களை வாங்க விரும்புகின்றனர். அதற்கு, அதிகளவில் செலவிடுகின்றனர். இந்தியாவின் இன்னொரு பலம், இளைஞர்கள். மொத்த மக்கள் தொகையில், 35 வயதுக்கு உட்பட்டோர் எண்ணிக்கை, 70 சதவீதமாக உள்ளது. இத்தகையோர், வலைதளம் வாயிலான வர்த்தக வளர்ச்சிக்கு, குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றனர். வலைதள வர்த்தகத்தில், 27 சதவீதம் வங்கிகளின், ‘கிரெடிட், டெபிட்’ கார்டுகள் வாயிலாகவும், 22 சதவீதம், ரொக்கத்திலும் நடைபெறுகிறது.
ஸ்மார்ட் போன்
தற்போது, ‘இ – வாலெட்’ எனப்படும், மின்னணு பணப் பைகள் மூலம், வலைதளத்தில் வாங்கும் பொருட்களுக்கு, பணம் செலுத்தும் முறை பிரபலமாகி வருகிறது. இதுவும், இந்தியாவின் வலைதளம் வாயிலான வர்த்தக வளர்ச்சிக்கு, பெரும் பங்கை வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது, 8 சதவீதம் பேர் மட்டுமே, மின்னணு பணப் பைகளை பயன்படுத்துகின்றனர். இது, வரும் ஆண்டுகளில், வேகமாக பெருகும். வரும், 2020ல், ஸ்மார்ட் போன் வாயிலாக வாங்கும் பொருட்களுக்கான, மின்னணு பணப் பையின் சந்தை மதிப்பு, 510 கோடி டாலராக உயரும் என, கணிக்கப்பட்டு உள்ளது.
இத்துடன், மத்திய அரசின், ‘டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி’ போன்ற நவீன தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்களும், இந்தியாவின் வலைதள வர்த்தக பரிவர்த்தனை வளர்ச்சிக்கு நன்கு உதவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|