பதிவு செய்த நாள்
18 பிப்2017
04:49
மும்பை : வசூலாகாத கடன்களால், பொதுத் துறை வங்கிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க, ‘தேசிய வாராக்கடன் வங்கி’ அமைக்கும் கொள்கைக்கு, ரிசர்வ் வங்கி ஆதரவு தெரிவித்துள்ளது.
கடந்த, 2016 ஜூன் நிலவரப்படி, பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் வாராக்கடன், 6 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. இதில், பொதுத் துறை வங்கிகளின், 20 கணக்குகளில் மட்டும், 1.54 லட்சம் கோடி ரூபாய், வசூலிக்க வேண்டி உள்ளது.
திணறல்ரிசர்வ் வங்கி, இரு ஆண்டு களுக்கு முன் பிறப்பித்த உத்தரவில், ‘அனைத்து வங்கிகளும், வாராக்கடன்களை, 2017 மார்ச் இறுதிக்குள் சீரமைத்து, நிதி நிலையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்’ என, தெரிவித்திருந்தது. எனினும், வங்கிகள், வாராக்கடன்களுக்கு தீர்வு காண முடியாமல் திணறி வருகின்றன. இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம், சமீபத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், ‘தேசிய வாராக்கடன் வங்கி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதில் வங்கிகளின் வசூலாகாத கடன்களை மாற்றிக் கொள்ளலாம் என, தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் பரிந்துரைத்திருந்தார்.
இந்த திட்டம் அமலானால், பொதுத் துறை வங்கிகள், சர்வதேச, ‘பேசல் 3’ விதிமுறைப்படி, அவற்றின் பங்கு மூலதனத்தை உயர்த்தி, நிர்ணயிக்கப்பட்ட, மூலதன ஆதாய விகிதத்தை பராமரிக்க வழி ஏற்படும் என, கூறப்படுகிறது. தற்போது, வங்கிகள், அவற்றின் வாராக்கடனை, தள்ளுபடி விலையில், சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்களிடம் விற்பனை செய்கின்றன. அந்நிறுவனங்கள், கடனை வசூலித்துக் கொள்கின்றன.
ஆதரவு‘தேசிய வாராக்கடன் வங்கி’யிடம், வாராக்கடன்களை மாற்றும் போது, அவை, சந்தை விலைக்கு வழங்கப்படும் என்பதால், வங்கிகளின் இழப்பு குறையும். மேலும், வங்கிகள், கடன் வழங்குவதை மட்டுமே இலக்காக கொண்டு, திறம்பட செயல்பட முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, ரிசர்வ் வங்கியின், துணை கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள விரால் ஆச்சார்யா கூறியதாவது:வங்கிகளின் வசூலாகாத கடன், பெரிய பிரச்னையாக உள்ளதால், வாராக்கடன் வங்கி அமைப்பது உள்ளிட்ட, பலவகையான தீர்வுகளை ஆராய்வதில் தவறில்லை. வாராக்கடன் விற்பனையில், வங்கிகளுக்கு, உரிய விலை கிடைக்க வேண்டும். அதற்கான விதிமுறைகளை, தெளிவாக உருவாக்கினால் பலன் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த போது, வாராக்கடன் வங்கி அமைக்கும் கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை; தற்போது, உர்ஜித் படேல் தலைமையிலான, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர், இக்கொள்கைக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வங்கித் துறை, வாராக்கடன் பிரச்னையில் இருந்து விடுபட வேண்டும். அப்போது தான், சிறிய தொழில்களுக்கும், பிற துறைகளுக்கும் தாராளமாக கடன் வழங்க முடியும். இதற்கு, ‘தேசிய வாராக்கடன் வங்கி’ உதவும்.-உதய் கோட்டக்,தலைவர் , கோட்டக் மகிந்திரா பேங்க்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|