பதிவு செய்த நாள்
21 பிப்2017
23:53
ஐதராபாத் : ‘‘இந்தியா, அடுத்த, 3 – 4 ஆண்டுகளில், பட்டு உற்பத்தியில் தன்னிறைவு அடையும்,’’ என, மத்திய பட்டு வாரியத்தின் தலைவர், கே.எம்.ஹனுமந்தராயப்பா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது: சர்வதேச பட்டு உற்பத்தியில், சீனா, 80 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில், 13 சதவீத பங்களிப்புடன், இந்தியா உள்ளது. இந்தியா, பட்டு உற்பத்தியை அதிகரிக்க, தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவால், பட்டு உற்பத்தி, ஆண்டுக்கு, 19 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது. தற்போது, இந்தியா, ஆண்டுக்கு, 28 ஆயிரம் டன் முதல், 30 ஆயிரம் டன் வரை, பட்டு உற்பத்தியை மேற்கொள்கிறது. அடுத்த, மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், பட்டு உற்பத்தியை, 34 ஆயிரம் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த இலக்கை எட்டும்பட்சத்தில், இந்தியா, பட்டு உற்பத்தியில் தன்னிறைவு அடையும். இறக்குமதிக்காக, சீனாவை சார்ந்திருக்கும் நிலை, முடிவுக்கு வரும். ஏற்கனவே, பட்டு இறக்குமதி, 6,500 டன்னில் இருந்து, 3,500 டன்னாக குறைந்துள்ளது.
சீனா, மல்பரி பட்டு வகையை மட்டுமே உற்பத்தி செய்கிறது. ஆனால், இந்தியாவில், ‘டசார், முகா’ உள்ளிட்ட, பட்டு வகைகள் உற்பத்தி ஆகின்றன. பட்டு உற்பத்தியை அதிகரிக்க, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். நிதிச் சலுகைகள் வழங்கி, பட்டு விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம், இந்தியா, பட்டு உற்பத்தியில் வெகு விரைவாக தன்னிறைவு அடையும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|