பதிவு செய்த நாள்
23 பிப்2017
00:42
புதுடில்லி : ‘இந்தியாவில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் தோல்வியை தவிர்க்க, மத்திய அரசு, மேலும் பல ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஆதரவளிக்க வேண்டும்’ என, ‘பிக்கி’ எனப்படும், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு, பிரிட்டன் மற்றும் இந்தியாவில் உள்ள, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது.
அதன் விபரம்: வலைதளங்கள் மூலம், புதுமையான வர்த்தகங்களில் ஈடுபடும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றன.
ஊக்கச்சலுகைகள் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், முதலீடுகளை திரட்டி, பணிக்கு ஆட்களை அமர்த்தி, வர்த்தகத்தை துவக்கும் வரை, பலதரப்பட்ட பிரச்னைகளை எதிர்கொள்கிறது. சர்வதேச ஸ்டார்ட் அப் மையங்களில் ஒன்றாக விளங்கும் லண்டனில், ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தோல்வி அடைவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில், எத்தகைய இடர்பாடுகளையும் துணிவுடன் எதிர்கொள்ளும் திறன் பெற்ற தொழில்முனைவோர், தோல்வி அடைவது ஏற்புடையதல்ல.
அத்தகைய தோல்விகளுக்கான காரணங்களையும், வெற்றிக்கான தடைகளையும் ஆராய்ந்து, அவற்றை களைய வேண்டும். மத்திய அரசு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தன்மையை ஆய்வு செய்து, அதனடிப்படையில், முதலீட்டாளர்களுக்கு ஊக்கச்சலுகைகளை வழங்கலாம். இதன் மூலம், சிறப்பான வர்த்தக வாய்ப்புள்ள திட்டங்களை கைவசம் வைத்திருந்தும், முதலீடின்றி தவிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு விடிவு பிறக்கும். கார்ப்பரேட் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்து, பொருட்களை கொள்முதல் செய்வதன் வாயிலாக, சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரலாம்.
மத்திய அரசு, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ வலைதளத்தில் உள்ள, அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பொருட்கள், சேவைகள் ஆகியவற்றின் கொள்முதலை ஊக்குவிக்க, நடவடிக்கை எடுக்கலாம்.தொழில் முனைவோர், நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றி, தொழிலில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
புதுமையும், கண்டுபிடிப்பும்இதற்கு, தொழில் முனைவோர் குழுக்களை, வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள, நவீன தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஆய்வுக் கூடங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை, நேரில் காண ஏற்பாடு செய்யலாம். இதனால், இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து வர்த்தகம் புரிய, வாய்ப்பு கிடைக்கும்.புதுமையும், கண்டுபிடிப்பும் இணைந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், புதிய இந்தியாவின் முதுகெலும்பாகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மையங்களாகவும் உருவெடுத்து வருகின்றன. இதற்கு, ‘மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா’ உள்ளிட்ட, பல திட்டங்கள் துணை புரிகின்றன. இத்தகைய சூழலில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தோல்வியை குறைக்க, நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|