பதிவு செய்த நாள்
23 மார்2017
06:29
புதுடில்லி: வாடிக்கையாளர் சேவையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களின் பொருட்களை வாங்குவதற்கே, இந்தியாவில் உள்ள, பெரும்பான்மையான நுகர்வோர்கள் ஆர்வம் காட்டுவது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் குளோபல் சர்வீசிங் நெட்வொர்க் நிறுவனம், இந்தியா, அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, பிரிட்டன், இத்தாலி, ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய ஒன்பது நாடுகளில், நுகர்வோரிடம் ஆய்வு மேற்கொண்டது.
திருப்திஅதன் அடிப்படையில், இந்தாண்டின் சர்வதேச வாடிக்கையாளர் சேவை அளவீடு குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது.அதன் விபரம்: இந்தியர்கள், கொடுக்கும் பணத்தின் மதிப்புக்கு நிகரான பொருட்களை வழங்கும் நிறுவனங்களையே நாடுகின்றனர். அதிலும், வாடிக்கையாளர் சேவையில், சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.அத்தகைய நிறுவனங்களின் பொருட்களை தொடர்ந்து வாங்குவதுடன், வாடிக்கையாளர் சேவையில் தங்களுக்கு ஏற்பட்ட திருப்தியை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 84 சதவீதம் பேர், வாடிக்கையாளர் சேவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிறுவனங்களின் பொருட்களை, தொடர்ந்து வாங்குவதாக தெரிவித்து உள்ளனர்.
திருப்தியான வாடிக்கையாளர் சேவை குறித்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வதுடன், அவற்றின் மூலமாகவே, வாடிக்கையாளர் சேவைகளை பெறுவதாகவும், 64 சதவீதம் பேர் கூறியுள்ளனர்; இது, மெக்சிகோ, அமெரிக்கா, ஹாங்காங், ஜப்பான் ஆகிய நாடுகளை விட அதிகம்.வாடிக்கையாளர் சேவையில், மோசமான அனுபவத்தை சந்திக்க நேர்ந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொருட்களை வாங்காமல் புறக்கணிப்பதாக, 63 சதவீதத்தினர் கருத்து தெரிவித்து உள்ளனர்.ஒரு நிறுவனம், மிகச் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கினால், அந்நிறுவனத்தின் பொருட்களுக்கு, கூடுதல் விலை கொடுக்கவும் தயாராக இருப்பதாக, 86 சதவீதம் பேர் கூறிஉள்ளனர்.
அக்கறைஇக்கருத்துக்கு, அமெரிக்காவில், 70; பிரிட்டன், 59; சிங்கப்பூர், 72 மற்றும் ஜப்பானில், 33 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையில் மகிழ்ச்சி அடையும் இந்தியர்கள், தங்கள் அனுபவத்தை ஏராளமானோரிடம் விரும்பி பகிர்ந்து கொள்கின்றனர். இதில், இந்தியர்களை விட, பிற நாட்டினர் மிகவும் பின்தங்கி உள்ளனர். இந்தியாவில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள், தரமான பொருட்களை வழங்க, அதிக அக்கறை எடுத்துக் கொள்கின்றன. அதே அளவிலான ஈடுபாட்டை, வாடிக்கையாளர் சேவைக்கும் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. சிறப்பான வாடிக்கையாளர் சேவை வழங்கும் நிறுவனங்கள் மட்டுமே, போட்டியை சமாளித்து, வர்த்தகத்தை திறம்பட மேற்கொள்ள முடியும் என்பதை, இந்த ஆய்வு வெளிப்படுத்தி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|