பதிவு செய்த நாள்
29 மார்2017
01:16
மும்பை : ‘மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, தயாரிப்புத் துறை, மூன்று மாத மந்த நிலைக்கு பின், நடப்பு மார்ச்சில் விறுவிறு வளர்ச்சியை கண்டுள்ளது’ என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதன் விபரம்:சீனாவின் மலிவு விலை உருக்கு பொருட்கள் இறக்குமதியால், உள்நாட்டு உருக்கு துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ஒருசில உருக்கு பொருட்களின் இறக்குமதிக்கு, பொருள் குவிப்பு தடை வரி விதிக்கப்பட்டது. உருக்கு பொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது.
இலக்குமேலும், சாலை, ரயில், துறைமுகம், ராணுவம், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.இது, தயாரிப்புத் துறையின் வளர்ச்சிக்கு துணை புரிந்து வருகிறது. அடிப்படை கட்டமைப்பு வசதிகளில், சாலைகள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. அதனால், சாலை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தினமும், 8.2 கி.மீ., வீதம், 3,000 கி.மீ., நெடுஞ்சாலை திட்டங்களை நிறைவேற்ற இலக்கு நிர்ணயித்திருந்தது. அதில், தினமும், 6.5 கி.மீ., என்ற அளவில், 2,350 கி.மீ., நெடுஞ்சாலை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இது, இலக்கை விட குறைவு என்ற போதிலும், வரும், 2017 – 18ம் நிதியாண்டில், நெடுஞ்சாலை பணிகள் வேகமெடுக்கும்; தினமும், 15 கி.மீ., வீதம், 5,475 கி.மீ., அளவிற்கு, நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. சாலை வசதிகள் காரணமாக, சரக்கு போக்குவரத்து விரைவாக மேற்கொள்ளப்படுகிறது. மின் துறையிலும், அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதர மண்டலங்களில் இருந்து, வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களுக்கு மின் வினியோகம் மேற்கொள்ள, மின் தொடர் கட்டமைப்பு பணிகள் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன. இதை, 19வது மின் துறை ஆய்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.
புத்துயிர்மத்திய அரசின் நடவடிக்கைகளும், அதிகரித்து வரும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், தயாரிப்புத் துறைக்கு புத்துயிரூட்டி உள்ளன. இத்துறையின் ஆண்டு வளர்ச்சியை மதிப்பிடும், ‘எஸ்.பி.ஐ., காம்போசிட் இன்டெக்ஸ்’ மூன்று மாதங்களுக்கு பின், 50 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 50.3 புள்ளிகளாக அதிகரித்து உள்ளது. அது போல, மாதாந்திர குறியீடும், நடப்பு மார்ச்சில், 53.3 புள்ளிகளாக உயர்ந்துள்ளது; இது, பிப்ரவரியில், 49.2 புள்ளிகளாக குறைந்து இருந்தது.தயாரிப்புத் துறையின் இத்தகைய ஏற்றத்தால், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, பிப்ரவரி, மார்ச்சில் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|