பதிவு செய்த நாள்
18 ஏப்2017
04:13
புதுடில்லி : ‘இந்தியா, ஸ்பெயின் போன்ற ஏழை நாடுகளில், என் மொபைல் போன் ‘ஆப்’ வர்த்தகத்தை விரிவுபடுத்த விருப்பமில்லை’ என, ‘ஸ்நாப்சாட்’ நிறுவனரின் ஆணவ பேச்சு, இந்திய மொபைல் போன் உலகில், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த, 21 வயது இளைஞர் இவான் தாமஸ் சீகல், 2011ல், மொபைல் போனில் படங்கள், வீடியோ, தகவல்கள் உள்ளிட்டவற்றை மிக விரைவாக பகிர்ந்து கொள்ளும், ஸ்நாப்சாட் என்ற, ‘ஆப்’பை வெளியிட்டார்.ஒரு வீடியோவை பதிவிறக்கி பார்த்த பின், மாயமாக மறைந்து விடும் தொழில்நுட்பம் தான் இந்த, ‘ஆப்’பின் சிறப்பம்சம். மொபைல்போன் நினைவகத்தை ஆக்கிரமிக்காமல், அதே சமயம், பார்த்த அந்தரங்க படங்கள் உடனே அழிந்து விடுவதால், பாதுகாப்பான இந்த அப்ளிகேஷனை, கோடிக்கணக்கானோர் பதிவிறக்கினர். குறுகிய காலத்தில், 16 கோடி பேர், தினமும் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு ஸ்நாப்சாட் வளர்ந்தது.
இந்தியாவில் மட்டும், 40 லட்சத்திற்கும் அதிகமானோர், இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், ‘ஸ்நாப்சாட், பணக்காரர்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டது. அதனால், இந்தியா, ஸ்பெயின் போன்ற ஏழை நாடுகளில் வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பவில்லை’ என, 2015 செப்டம்பரில், சீகல் கூறியதை, ஸ்நாப்சாட் முன்னாள் அதிகாரி, அந்தோணி பாம்பிலியானோ தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதை அடுத்து, சமூக வலைதளங்களில், சீகலுக்கு எதிராக, கடும் கண்டனக் கணைகள் பாய்ந்தன. ‘அவர் மன்னிப்பு கேட்கும் வரை, ஸ்நாப்சாட் பயன்படுத்தப் போவதில்லை’ என, லட்சக்கணக்கான இந்தியர்கள், ஸ்நாப் சாட், ‘ஆப்’பை, மொபைல் போனில் இருந்து அகற்றினர்.
ஏராளமானோர், ஸ்நாப்சாட் தரத்தை குறைத்ததால், ஒரே நாளில், ஆண்ட்ராய்டு பிளேஸ்டோரில், அதன் நான்கு நட்சத்திர தரக் குறியீடு, ஒன்றாக குறைந்தது. இதனிடையே, இந்தியாவை தாழ்த்திப் பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டை, சீகல் மறுத்துள்ளார். நெட்டிசன்களின் ‘டிரென்டிங்’கில், இந்த விவகாரம் தான் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
சில சமூக வலைதள பதிவுகள்* ஸ்நாப்சாட் எதிர்ப்பில், இந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர் என, யாரையும் பிரித்து பார்க்க முடியவில்லை. எங்களை ஒற்றுமைப்படுத்தியதற்கு நன்றி* நான் ஸ்நாப்சாட் அடிமை. ஆனால், அதை விட, என் தேசத்தை நேசிக்கிறேன். இந்தியர்கள் தயவின்றி நீ எப்படி சம்பாதிக்க முடியும் பார்க்கலாம்?* ஸ்நாப்சாட் சகாப்தம் முடிந்தது. பாவம் இவான் சீகல் * நான்கில் மூன்று பங்கு இந்தியர்களை நிறுவனத்தில் வைத்துள்ள சீகல், ஏன் இப்படி முட்டாள்தனமாக பேசினார்.
பழிக்கு பழிஇந்தியாவைச் சேர்ந்த கணினி நாசகாரர்கள், கடந்த ஆண்டு, ஸ்நாப்சாட் வலைதளத்தில் ஊடுருவி கைப்பற்றிய, 17 லட்சம் பயனாளிகளின் விபரத்தை, பழிக்குப் பழியாக, தற்போது வெளியிட்டுள்ளனர்.
ஸ்நாப்டீல் புலம்பல்மொபைல் போன் பயனாளிகள் பலர், ஸ்நாப்சாட் ‘ஆப்’பை, அழிக்க நினைத்து, தவறுதலாக ஸ்நாப்டீல் ‘ஆப்’பை அகற்றிவிட்டதாக, அந்நிறுவனம் புலம்பியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|