பதிவு செய்த நாள்
23 ஏப்2017
06:38
– நமது நிருபர் –சென்னை அருகே, கார் ஆலைகள் நடத்தி வரும், ‘ஹூண்டாய்’ நிறுவனத்தின், துணை நிறுவனமான, ‘கியா’ மோசமான அரசியல் சூழல் காரணமாக, தமிழகத்தை புறக்கணித்து விட்டு, ஆந்திராவில், 10,300 கோடி ரூபாய் முதலீட்டில், புதிய ஆலை அமைக்க முடிவெடுத்து உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகில் உள்ள, இருங்காட்டுக்கோட்டையில், தென் கொரியாவைச் சேர்ந்த, ‘ஹூண்டாய்’ வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அங்கு, 535 ஏக்கர் பரப்பில், ஆண்டுக்கு, ஏழு லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும், இரு ஆலைகள் நிறுவப்பட்டு உள்ளன.ஹூண்டாயின் துணை நிறுவனமான, ‘கியா’ பல்வேறு ரக கார்களை தயாரித்து வருகிறது. அந்த நிறுவனமும், இந்தியாவில் ஆலை துவங்க விரும்பியது. இங்கு, முதலிடத்தில் உள்ள மாருதியின் போட்டியை சமாளிக்க, கியாவின் வருகை உதவும் என, ஹூண்டாயும் கருதியது. அந்த நிறுவனம், தற்போது, ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், பெனுகொண்டா என்ற இடத்தில், 10,300 கோடி ரூபாயில், கார் தயாரிப்பு ஆலை அமைக்க உள்ளது.இந்தியாவில், ஹூண்டாயின் தாயகமாக திகழும் தமிழகம், அதன் துணை நிறுவனம் துவங்கவுள்ள, முதல் ஆலையை பெற முடியாமல், கோட்டை விட்டுள்ளது.இது குறித்து, தமிழக ஆட்டோ மொபைல் துறையினர் கூறியதாவது:கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, ஹூண்டாய் நிறுவனம், கியா ஆலைக்காக இடம் தேடியது. இங்கு நிலவும் அரசியல் பிரச்னைகள், கமிஷன் கேட்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், எளிமையில்லாத ஒப்புதல் நடைமுறைகள் போன்ற காரணங்களால், தொழில் வாய்ப்புகள் பறிபோகின்றன.இந்த காரணங்களால் தான், ஹூண்டாய் நிறுவனம், தமிழகத்தில் கியா ஆலை அமைப்பதற்கு, சாதகமான கருத்துக்களை கூறவில்லை. ஆந்திராவில், ஏப்., 12ல், கியா நிறுவன அதிகாரிகள், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தனர். அடுத்த சில நாட்களில், 600 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணி துவங்கியது. மே மாதத்தில், கட்டுமானப் பணிகள் துவங்கவுள்ளன. முதற்கட்டமாக, 6,000 கோடி ரூபாயும், இரண்டாம் கட்டத்தில், மீதத் தொகையும் முதலீடு செய்யப்பட உள்ளது.கியா வருகையால், ஆண்டுக்கு, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்களை, ஹூண்டாய் குழும நிறுவனங்களால் தயாரிக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
சந்திரபாபு சாதுர்யம்பிரதமரின், ‘மேக் இன் இந்தியா’ திட்டம், வெளிநாட்டு நிறுவனங்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. புதிய ஆலைகளை ஈர்க்க, அதிக சலுகைகள் வழங்குவதில், மாநிலங்கள் போட்டி போடுகின்றன.ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கியா திட்டம் பற்றி அறிந்ததும், ஹூண்டாய் அதிகாரிகளை, ஆந்திர அதிகாரிகள் சந்திக்க ஏற்பாடு செய்தார். பின், கியா நிறுவனத்தை நேரடியாக தொடர்பு கொண்டு, காரியத்தை சாதித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|